விவிஎஸ் லக்ஷ்மனுடன் பிசிசிஐ அவசர மீட்டிங்.. எல்லை மீறிப் போன நிலைமை.. 10 வீரர்களுக்கு காயம்
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலர் அடுத்தடுத்து காயத்தில் சிக்கி அவதிப்பட்டு வருவதால், பிசிசிஐ அவசர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சுமார் 10 இந்திய அணி வீரர்கள் காயமடைந்து இருக்கும் நிலையில், அவர்களை கொண்டே ஒரு தனி அணியை உருவாக்கும் அளவிற்கு தற்போதைய நிலைமை மிக மோசமடைந்துள்ளது. பெங்களூரில் இருக்கும் பிசிசிஐ-யின் சிறப்பு மையம் ஒரு மருத்துவமனை போல மாறி விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதை அடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்திற்குச் (Centre of Excellence) சென்று அதன் தலைவர் வி.வி.எஸ்.லக்ஷ்மணுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் இணையவழியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழங்கால் வீக்கத்தாலும், டெஸ்ட் அணி வீரர் சாய் சுதர்சன் இடது கால் விரல் காயத்தாலும் அவதிப்பட்டு வருகின்றனர். சாய் சுதர்சன் தினமும் 75 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சி செய்த போதும் அவரால் போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறி விட்டனர்.
மேலும், ஹர்ஷித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகிய வீரர்களும் பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் முழங்காலில் நீர் கோர்த்துள்ளதால் அவர் குணமடைய கூடுதல் காலம் தேவைப்படுகிறது. அதேபோல பந்துவீச்சு வேகத்தை 7 முதல் 8 கி.மீ வரை உயர்த்த முயன்ற நிதீஷ் ரெட்டிக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம், விளையாட்டு அறிவியல் பிரிவின் தலைவர் நிதின் படேல் 2025ன் தொடக்கத்தில் விலகியதிலிருந்து, அந்தப் பிரிவு தலைவரே இல்லாமல் இயங்கி வருவதால் வீரர்கள் குணமடைவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
வீரர்களின் உடற்தகுதி மற்றும் அவர்கள் மீண்டும் விளையாடத் தகுதி அடைந்து விட்டார்களா என்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதில், தேர்வுக் குழுவிற்கும் சிறப்பு மையத்திற்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த வீரர்களை விரைவாக குணப்படுத்தி மீண்டும் அணிக்கு கொண்டு வர பிசிசிஐ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications

