மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி நிறத்தில் ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தவறானது என்று தெரிய வந்துள்ளது. இந்திய அணிக்கு எப்போதும் ப்ளூ ஜெர்சி வடிவமைக்கப்படும் என்றும், விரைவில் அதற்கான அறிமுக விழா நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக ட்ரீம் லெவன் நிறுவனம் இருந்து வந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இதனால் ட்ரீம் லெவன் உடனான உறவை முறித்துக் கொள்வதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா அறிவித்துள்ளார். இதனால் ஆசியக் கோப்பை தொடரில் புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்த நிலையில் புதிய ஸ்பான்சருக்கான போட்டியில் பல்வேறு நிறுவனங்கள் இருக்கின்றன. குறிப்பாக டொயோட்டா, ஃபின்டெக், டாட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன.
இதனால் எந்த நிறுவனம் அதிக தொகை கொடுக்க முன் வருகிறதோ, அந்த நிறுவனம் இந்திய அணியில் ஜெர்சி ஸ்பான்சராக ஒப்பந்தம் செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய அணியின் ஜெர்சி மொத்தமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் இம்முறை நீல நிற ஜெர்சி அல்லாமல் காவி நிறத்தில் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கேற்ப காவி நிறத்தில் ஜெர்சி ஒன்று வடிவமைக்கப்பட்டு சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அடிடாஸ் நிறுவனத்தில் ஸ்டைலில் ப்ளூ ஜெர்சி வடிவமைக்கப்பட்டதை போல், அதே ஸ்டைலில் காவி நிறத்தில் ஜெர்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே இது போலியான டிசைன் என்றும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காவி நிறத்தில் ஜெர்சி வெளியாகியது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதன்படி அது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போலியான ஜெர்சி என்றும், இந்திய அணிக்கு எப்போதும் ப்ளூ ஜெர்சியை தான் வடிவமைப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஆசியக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.