ரோஹித் சர்மா - கோலி மோதல்
கடந்த ஆண்டுகளிலேயே லேசாக கோலி - ரோஹித் சர்மா இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை யாரும் பெரிதுபடுத்தவில்லை. மேலும், அணியல் இருவரும் ஒன்றாக ஆடி வரும் நிலையில், விரிசல் இருக்க வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது.
பரபரக்கும் சம்பவங்கள்
ஆனால், உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் ரோஹித் சர்மா மட்டும் இங்கிலாந்தில் இருந்து தனியே இந்தியா திரும்பினார். அதன் பின் ரோஹித் - கோலி இடையே விரிசல் என செய்திகள் வந்தது. சமீபத்தில் கூட ரோஹித் சர்மா, கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்ததாக தகவல் வெளியானது.
அன்பாலோ விவகாரம்
அதை உறுதிப்படுத்தும் வகையில் அனுஷ்கா ஒரு விடுகதை போன்ற பதிவை பகிர்ந்து இருந்தார். ஏற்கனவே, விராட் கோலியை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரோஹித் அன்பாலோ செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
கேப்டன் பதவிக்கு போட்டி
அடுத்து நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி ஓய்வு பெறுவார். ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என முதலில் கூறப்பட்டது. அப்போது, அந்த தொடரில் ரோஹித் சிறப்பாக செயல்பட்டால், அவரே கேப்டனாக தொடர்வார் என ஒரு வதந்தி பரவியது.
கோலி திடீர் முடிவு
கேப்டன் கோலியை, பதவியில் இருந்து நீக்கி விட்டு, ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் பிசிசிஐயில் ஒலித்தன. ஆனால், திடீரென கோலி தன் ஓய்வை ரத்து செய்துவிட்டு கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட முடிவு செய்தார்.
பிசிசிஐ அதிகாரி விளக்கம்
இப்படி ஏராளமான கோலி - ரோஹித் இடையே பல சம்பவங்கள் மறைமுகமாக நடந்து வரும் நிலையில், பிசிசிஐயில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், இது எல்லாமே ஊடகங்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை என கூறி இருக்கிறார்.
வெடிக்கப் போகிறது
அணிக்குள் இருக்கும் விரிசல் குறித்து பிசிசிஐ விசாரணை செய்யுமா? என கேட்டதற்கு, அதற்கு எங்கே நேரம் இருக்கிறது? என பதில் கூறி மலைக்க வைத்துள்ளார் அவர். கடந்த காலங்களில் புகைந்து, தற்போது தீப்பிடித்து எரிந்து வரும் இந்த விரிசல் விவகாரம், விரைவில் வெடிக்கப் போகிறது என பிசிசிஐயில் இருக்கும் சிலர் கவலையில் இருக்கிறார்கள்.
பிசிசிஐயில் குழப்பம்
பிசிசிஐ தற்போது சுயமாக இயங்கவில்லை. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக கமிட்டி தலைமையில் இயங்கி வருகிறது. அந்த கமிட்டியிலும் அரசியல் இருக்கிறது. மேலும், விதிகளை அலசி ஆராய்ந்து ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்து விட்டு, அவசியமான பிரச்சனைகளை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்கிறார்கள் சில பிசிசிஐ அதிகாரிகள்.