மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் இணைந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரிடன் 6 மணி நேரமாக பல்வேறு விஷயங்களை விவாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி முதல்முறையாக இழந்தது. அதேபோல் 92 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.

இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே பிசிசிஐ தரப்பில் விரைவில் ரிவ்யூ மீட்டிங் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீடியோ கால் மூலமாக மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனை சுமார் 6 மணி நேரம் வரை நீடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கையில், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணி நிச்சயம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக உள்ளது.
அதன்பின் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதை பிசிசிஐ நிர்வாகிகள் ரசிக்கவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து கேள்விகள் எழுந்த போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புனே மைதானத்தில் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் இந்திய அணி தோல்வியை சந்தித்தனர்.
ஆனால் மீண்டும் மும்பையிலும் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்தது ஏன் என்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதன்பின் ஜெய் ஷா, ரோஜர் பின்னி மற்றும் அஜித் அகர்கர் தரப்பில் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கோச்சிங் ஸ்டைல் குறித்தும் ஆலோசனை நடந்துள்ளன.
அப்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய அணியில் உள்ள சில நிர்வாகிகள் இடையில் சில கருத்து வேறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இளம் ஆல்ரவுண்டரான நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்சித் ராணா இருவரின் தேர்வு குறித்தும் சில விவாதங்கள் நடந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன் இப்படியான ஆலோசனை கூட்டம் நடப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் கவுதம் கம்பீரின் பயிற்சி முறைகள் குறித்து அதிகமாக விவாதம் நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதேபோல் நவம்பர் இறுதியில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால், சில கருத்துகளும் பரிமாறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.