அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் பிசிசிஐ தண்டனை அளித்து இருக்கிறது. எதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம்.
நேற்று நடந்த இந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் திட்டமிட்ட நேரத்தில் துவங்கவில்லை. எட்டு மணிக்கு போட்டி துவங்கி இருக்க வேண்டும். ஆனால், அப்போதும் மழை பெய்ததால் போட்டி சற்று தாமதமானது. இரவு 9.45க்கு தான் போட்டி துவங்கியது. திட்டமிட்ட நேரப்படி போட்டியை முடிக்க வேண்டும் எனில், நள்ளிரவு 12.55க்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், போட்டி முடிவடைய நள்ளிரவு 1.40 வரை ஆனது.

இது முக்கியமான போட்டி என்பதால், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுமே பந்துவீசி முடிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொண்டன. பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீசியபோது, 20 ஆவது ஓவரின் போது ஓவர் ரேட் முறையாக கடைபிடிக்காததால், கடைசி ஓவரில் உள்வட்டத்தில் ஐந்து ஃபீல்டர்கள் நிற்க வேண்டும் என அம்பயர்கள் அறிவுறுத்தினர்.
அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசியபோது, 19 ஓவருக்குள் சேசிங்கை பஞ்சாப் கிங்ஸ் முடித்ததால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. எனினும், போட்டி முடிந்த பிறகு, இரண்டு அணிகளும் தங்களது ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
19 ஆவது ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டிய போது, மணி நள்ளிரவு 1.40 ஆகி இருந்தது. இரு அணிகளுமே அதிக நேரத்தை வீணடித்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் அனைத்து வீரர்களுக்கும் 12 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 50% ஆகியவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக இந்த குற்றத்தைச் செய்வதால் கூடுதல் தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்தைச் செய்ததால், அந்த அணியின் வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது 25% போட்டி சம்பளம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 30 லட்சம் ரூபாயும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் 3 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.