அயல்நாட்டு கிரிக்கெட் தொடர்
வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் புதிய அணியை வாங்கியுள்ளனர். அமீரகத்தின் ILt20 லீக்கில் கொல்கத்தா, டெல்லி, மும்பை அணி உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் தொடரில் உள்ள 6 அணிகளையுமே ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தான் வாங்கியுள்ளனர்.
உரிமையாளர்களின் திட்டம்
ஐபிஎல் முதலீட்டாளர்கள் வேறு நாடுகளுக்கும் சென்று முதலீடு செய்வதால் பிசிசிஐ கலக்கத்தில் இருந்தது. இதுமட்டுமல்லாமல், ஐபிஎல்-ல் விளையாடும் வீரர்களை இந்த தொடர்களுக்கும் பயன்படுத்த திட்டமிடும் உரிமையாளர்கள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிசிசிஐ அதற்கு பெரும் ஆப்பு வைத்துள்ளது.
ஆப்பு வைத்த பிசிசிஐ
இதுகுறித்து பேசியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், இந்திய அணியில் விளையாடும் வீரரோ அல்லது உள்நாட்டு தொடர் வீரரோ அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறாமல் அயல்நாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதி கிடையாது என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். முழுவதுமாக ஓய்வு பெற்று பிசிசிஐ-ன் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, பின்னர் வேண்டுமானால் செல்லலாம் எனக் கூறியுள்ளார்.
தோனிக்கும் ஆப்பு?
சிஎஸ்கே அணி உரிமையாளர், தென்னாப்பிரிக்க தொடரில் ஒரு அணியை வாங்கியுள்ளார். இதில் தோனியை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் தோனி இன்னும் உள்நாட்டு தொடரில் இருந்து ஓய்வு பெறாமல் அங்கு செல்ல முடியாது. அவர் முதலில் இங்கு ஓய்வு பெற வேண்டும். அதன்பின்னர் எங்கு வேண்டுமானாலும் சென்று விளையாடட்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்
உலகளவில் பெரும் புகழை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகள், வேறு நாடுகளில் முதலீடு செய்வதால் ஐபிஎல்-ன் தரம் குறைகிறது. தற்போது வீரர்களையும் அனுப்பினால், பெரும் பாதிப்பாக அமையும். எனவே ஐபிஎல்-ஐ வைத்து வேறு நாடுகளின் தொடர்களுக்கு புகழ் கொடுக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.