மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் சொதப்பிய விராட் கோலி, ரோஹித் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து தற்போது முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தது. கடைசியாக இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது முறை இந்திய அணியால் எட்ட முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் விராட் கோலி, ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள புதிய தகவல்படி மூன்று பேர் மீது பிசிசிஐ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய அணியின் அடுத்த முக்கிய இலக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தான் என்றும் அதில் வெற்றி பெற இந்திய அணி கவனம் செலுத்த ரோகித் சர்மா மற்றும் கம்பீருக்கு பிசிசிஐ அறிவுறுத்த உள்ளது.
மேலும் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் தொடர் ஜூன் மாதத்தில் தான் என்றும், அதில் விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஒரு தொடரில் தோல்வி அடைந்ததால் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள பிசிசிஐ ஆர்வம் காட்டவில்லை.
இதேபோன்று பேட்ஸ்மேன்கள் செய்த தவறால் தான் இந்திய அணி தோற்பதால் இதற்கு பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் முடிவு எடுத்து இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ரஞ்சி போட்டிகளில் விளையாட அறிவுறுத்தப்படுவார்கள். ஆனால் இருவரும் ஓய்வு வேண்டும் என முடிவெடுத்தால் அதற்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.