மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ராகுல் டிராவிட் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில் அடுத்த தலைமைப் பயிற்சியாளருக்கான தேடும் பணியை பிசிசிஐ ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் பல்வேறு ஊடகங்களில் பிசிசிஐ மற்றும் ஜெய்ஷா சார்பாக பிரபல ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் போன்ற வீரர்களிடம் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கூறியதாக செய்திகள் வெளியாகிறது.

ஆனால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இருவருமே மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு பெருமளவு ஊதியம் கொடுக்கப்படும். மேலும் மிகவும் உயரிய பதவியாகவும் கிரிக்கெட் உலகில் கருதப்படும் நிலையில் இருவருமே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டனர். இதனால் தனது மீசையில் மண் ஓட்டவில்லை என்ற பாணியில் தற்போது ஜெய்ஷா ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதில் தாம் எந்த ஒரு ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரிடமும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிங்கள் என்று கேட்கவே இல்லை. சில ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட்டு வருகின்றது. இந்திய அணிக்கு சரியான பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஒரு செயல்முறையை கடைப்பிடித்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டின் அமைப்பு குறித்து முழு அறிவு இருக்கும் நபர்களை தான் நாங்கள் தேடி வருகின்றோம்.
நமது உள்நாட்டு கிரிக்கெட் எப்படி இருக்கின்றது என்ற அதீத புரிதலும் இருந்தால் மட்டுமே இந்திய அணியை வேறொரு உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும். சர்வதேச கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டாலே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிகவும் பெருமைமிக்க பதவியாகும். ஏனென்றால் உலக கிரிக்கெட்டிலே அதிக ரசிகர்கள் கொண்ட அணியாக இந்தியா தான் இருக்கின்றது.
நமது கிரிக்கெட் வரலாறும் மிகவும் பாரம்பரிய மிக்கவை. எனவே இந்த பதவிக்கு வரும் நபர்கள் சரியான நபராக இருக்க வேண்டும். இதற்கான பணியை பிசிசிஐ செய்து வருகின்றது. நாங்கள் சரியான நபரை தான் தேர்வு செய்வோம் என்று ஜெயிஷா தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார். மே 27 ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். ஆனால் இதுவரை எந்த ஒரு பிரபல கிரிக்கெட் வீரர்களும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.