மும்பை : இந்திய கிரிக்கெட்டில் ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதை பிசிசிஐ குறைத்து விட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம் கிடையாது என்று பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி ஸ்ரேயாஸ் மற்றும் இசான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு ஓய்வே இன்றி நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து ஏழு போட்டிகளை விளையாடும் போது வீரர்களுக்கு உடன அளவில் மற்றும் மன அளவில் சோர்வு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்படுவதால் பல்வேறு ஆட்டம் தடைபடுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் பிசிசிஐ உள்நாட்டு போட்டி நடக்கும் அட்டவணையை முற்றிலுமாக தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்பாக எப்போதும் முஸ்தாக் அலி டி 20 தொடர், விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் நடத்தப்பட்டு விட்டு , அதன் பிறகு ரஞ்சிப் போட்டிகள் நடைபெறும். ஆனால் தற்போது இந்த முறை மாற்றப்பட்டிருக்கிறது. உள்நாட்டு சீசனில் முதலில் துலீப் கோப்பை நடைபெறும் அதன் பிறகு இரானி கோப்பையும் இது முடிந்த பிறகு தான் ரஞ்சிக் கோப்பை நடைபெறும்.
இதில் மொத்தம் ஐந்து போட்டிகள் முதலில் நடத்தப்படும். அதன் பிறகு கொஞ்சம் இடைவெளி கொடுக்கப்படும். இந்த இடைவெளியில் சையது முஸ்தாக் டி20 போட்டி மற்றும் விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் நடத்தப்படும். இந்தத் தொடர் முடிந்த பிறகு தான் எஞ்சியுள்ள ரஞ்சிப் போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னாள் பெங்கால் அணி கிரிக்கெட் வீரர் சுப்மாய் தாஸ் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பிசிசிஐ இந்த செயலுக்கு பின்னால் ஒரு நல்ல விஷயம் இருக்கும் என்று நினைக்கின்றேன். தற்போது ரஞ்சிப் போட்டி இரண்டு பகுதியாக நடத்தும் போது பல சர்வதேச வீரர்கள் ரஞ்சிப் போட்டியில் இறுதி கட்டத்தில் விளையாட நல்ல வாய்ப்பு ஏற்படும். இதனை நான் வரவேற்கின்றேன்.
ஏனென்றால் பல உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் தரம் எப்படி இருக்கும் என்று பல இளைஞர்களுக்கு தெரியாமலே போய்விடுகிறது. தற்போது இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று Mykhel-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சுப்மாய் தாஸ் தெரிவித்துள்ளார்.