கிரிக்கெட் அமைப்புகள் தவிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக வங்கதேசம், இலங்கை, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட சிறிய கிரிக்கெட் அணிகளின் அமைப்புகள் திவால் ஆகும் நிலையில் உள்ளன. எந்த கிரிக்கெட் போட்டியும் ஆட முடியாமல், வீரர்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
சிக்கல் இல்லை
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகள் கூட நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. அதனால் தான் அந்த அணிகள் விரைவாக கிரிக்கெட் போட்டிகளில் ஆட தயார் ஆயின. ஆனால், பிசிசிஐக்கு ஐபிஎல் நடத்தாமல் போனால் சில ஆயிரம் கோடி கிடைக்காது என்பதைத் தவிர வேறு எந்த சிக்கலும் இல்லை.
பணம் குவிந்து கிடக்கிறது
இன்னும் இரண்டு - மூன்று ஆண்டுகள் கூட கிரிக்கெட் போட்டிகளே ஆடாமல் அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு பணம் குவிந்து இருப்பதாக முன்பு பிசிசிஐ அதிகாரிகளே கூறினார்கள். ஆனால், தற்போது இந்திய அணியில் ஆடும் ஒப்பந்த வீரர்களுக்கே சம்பள பாக்கி உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சம்பளம் அளிக்கவில்லை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காலாண்டு ஒப்பந்த சம்பளத் தொகையை இந்திய வீரர்கள் பெறவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும், டிசம்பர் 2019 முதல் இந்திய அணி ஆடிய எந்த போட்டிகளுக்கும் வீரர்களுக்கு சம்பளம் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
99 கோடி
ஒப்பந்த வீரர்களுக்கு ஆண்டுக்கு 99 கோடி சம்பளம் அளிக்கப்படும். அது வீரர்களுக்கு கிரேடு முறையில் பிரிக்கப்பட்டு அளிக்கப்படும். விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா போன்றோர் ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் சம்பளம் 7 கோடி ஆகும்.
கிரேடு சம்பளம்
ஏ பிரிவுக்கு 5 கோடியும், பி பிரிவுக்கு 3 கோடியும், சி பிரிவுக்கு 1 கோடியும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல போட்டி சம்பளமாக ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் வழங்க வேண்டும்.
வெளியிட்ட வீரர்
ஆனால், டிசம்பர் 2019 முதல் போட்டி சம்பளமும், அக்டோபர் 2019 முதல் ஒப்பந்த சம்பளமும் இந்திய அணி வீரர்களுக்கு அளிக்கப்படவில்லை. இந்த விஷயம் இதுநாள் வரை வெளியில் தெரியவில்லை. தற்போது பெயர் வெளியிட விரும்பாத மூத்த வீரர் ஒருவர் இதை வெளியில் கூறி உள்ளார்.
பணம் இருப்பு
பிசிசிஐ கடந்த மார்ச் 2018 அன்று வெளியிட்ட நிதி நிலை அறிக்கையில் பணம் மற்றும் வங்கி இருப்பாக 5,526 கோடி கணக்கு காட்டப்பட்டு இருந்தது. ஏப்ரல் 2018இல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் ஐந்து வருட ஒப்பந்தம், சுமார் 6,100 கோடிக்கு கையெழுத்தானது.
நிர்வாக குளறுபடி
பிசிசிஐ-யிடம் இப்படி ஆயிரம் கோடிகளில் பணம் இருந்தும் ஏன் இந்திய அணி வீரர்களுக்கே சம்பளம் வழங்கவில்லை? இந்த கேள்விக்கு பதிலாக பிசிசிஐ வட்டாரம் நிர்வாக குளறுபடிகளை கை காட்டுகிறது. கடந்த டிசம்பர் 2019 உடன் தலைமை நிதி நிர்வாக அதிகாரியின் பதவிக் காலம் முடிவடைந்தது.
விமர்சனம்
அடுத்த அதிகாரியை நியமனம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் இடையே கடந்த மாதத்துடன் தலைமை செயல் அதிகாரி, பொது மேலாளர் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவுக்கு வந்துள்ளது. இவர்கள் யாரும் இல்லாத நிலையில், அனைத்து நிர்வாக பணிகளும் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர், மாநில கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் கூட சம்பள பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் பிசிசிஐ மீது விமர்சனம் எழுந்துள்ளது.