மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் இந்திய அணியை பொறுத்தவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், ஜூன் 27ஆம் தேதி இந்திய அணி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தத் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகியவற்றில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடியுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் அல்லது ஒருநாள், டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு ஓய்வளிக்கப்பட்டால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று தெரிந்ததுதான். ஆனால் டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டால், யார் கேப்டனாக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் 18 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரஹானே கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த முடிவை ரோகித் சர்மாவுடன் ஆலோசனை செய்த பிறகே பிசிசிஐ எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் டெஸ்ட் தொடரில் விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலும், நிச்சயம் புஜாரா களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.