கிரிக்கெட் ஆலோசனை குழு
சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிசிசிஐ அமைப்பில் கிரிக்கெட் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. அப்போது கங்குலி, சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லக்ஷ்மன் அதன் உறுப்பினர்களாக இருந்தனர்.
முக்கிய முடிவுகள்
இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தேர்வு செய்வது அவர்களின் பணியாக இருந்தது. அனில் கும்ப்ளே மற்றும் ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் பதவி அளித்தது இந்த குழு தான்.
திடீர் சர்ச்சை
பின்னர் பிசிசிஐயில் நிலவிய நிர்வாக குளறுபடிகளின் ஒரு பகுதியாக இவர்கள் மூவரும் இரட்டை ஆதாயம் பெறுவதாகக் கூறப்பட்டது. அது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அனைவரும் ராஜினாமா
இதை அடுத்து கங்குலி, சச்சின் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் மூவரும் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து பிசிசிஐ-யை விட்டு விலகினர். பின் கங்குலி பிசிசிஐ தலைவராக வந்து அதிரடி காட்டினார்.
கங்குலி முடிவு
தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, கிரிக்கெட் ஆலோசனை குழுவில் மீண்டும் சச்சின் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மனை உள்ளே கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் பிசிசிஐ அதிகாரிகள் மட்டத்தில் பேசி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
காரணம் என்ன?
தற்போது இருக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்களில் சிலரின் பதவிக் காலம் முடிவடைவதால் அவர்களை நியமிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழு விரைவாக நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேர்வுக் குழு உறுப்பினர்கள்
தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பதவிக் காலமும் முடிவடைகிறது. அடுத்ததாக சிறந்த, அனுபவம் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தேர்வுக் குழுவில் நியமிக்க காய் நகர்த்தி வரும் பிசிசிஐ தலைவர் கங்குலி, அந்த வேலையை சிறப்பாக செய்ய சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன் இருக்க வேண்டும் என நினைப்பதாகவே தோன்றுகிறது.