மும்பை : பிசிசிஐ இந்தியாவில் நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர், அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடர் மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கு இடையே ஆன இடைவெளியும் போதிய அளவில் இல்லை. அது மட்டுமில்லாமல், இந்த தொடருக்கு 5 நாட்கள் முன்பு தான் ஆசிய கோப்பை தொடர் முடிவடையும்.

இது போல கிரிக்கெட் தொடர்களை இடைவெளி இல்லாமல் நடத்தி வருவது ஏன் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளார்கள். அது மட்டுமில்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பலம் வாய்ந்ததாக இல்லை. டி20 தவிர்த்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை.
அப்படி இருக்க, பிசிசிஐ ஏன் எதிர்பார்ப்பு இல்லாத ஒரு தொடரை அவசர அவசரமாக முடிவு செய்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெல்லும் என இப்போதே ஆருடம் கூற ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள். மேலும், இந்திய வீரர்கள் பல சாதனைகளை முறியடிக்கப் போவதாகவும் கிண்டலாக குறிப்பிடுகிறார்கள்.
ஒருவேளை, வெஸ்ட் இண்டீஸ் ஒன்றிரண்டு போட்டிகளில் வெல்லலாம். ஆனால், டி20 தவிர மற்ற இரண்டு தொடர்களை வெல்ல வாய்ப்பே இல்லை. வெஸ்ட் இண்டீஸ் உடன் கிரிக்கெட் ஆடுவதில் தவறில்லை. ஆனால், இப்படி நேரமே இல்லாமல், ஓய்வே இல்லாமல் ஏன் அட்டவணை தயார் செய்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் மட்டுமல்ல, இந்தியா இந்த ஆண்டு முழுவதுமே இப்படி தான் ஆடி வருகிறது. ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து தொடர், அடுத்து இங்கிலாந்து தொடர், அடுத்த 7 நாட்களில் ஆசிய கோப்பை, அது முடிந்த 4 நாட்களில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், 10 நாட்கள் இடைவெளியில் ஆஸ்திரேலியா தொடர், அடுத்து 5 நாட்கள், இடைவெளியில் நியூஸீலாந்து தொடர் என கேட்பதற்கே மூச்சு வாங்க வைக்கும் அளவுக்கு அட்டவணை தயாரித்து வைத்துள்ளது பிசிசிஐ.