மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதிய கொள்கையைக் கொண்டுவர ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஒரு டெஸ்ட் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட பும்ரா தயாராக இருந்தால் மட்டுமே, அவரை அணிக்குத் தேர்வு செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும் என கூறப்படுகிறது. இல்லையெனில் அவருக்கு அந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படாது. பும்ராவுக்கு இந்த கட்டுப்பாடை விதிக்க பிசிசிஐ ஆலோசிக்க காரணமே தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்தான்.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், தனது உடல்நிலையால் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என பும்ரா முன்பே தெரிவித்திருந்தார். அதன்படி, முதல் போட்டிக்குப் பிறகு அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் மீண்டும் அணிக்குத் திரும்பினார். அவர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் 26 என்ற பவுலிங் சராசரியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளராகவே திகழ்ந்தார். இருந்தபோதிலும், நான்காவது போட்டியின் போது தசைப்பிடிப்பு மற்றும் சிறிய காயங்களால் அவதிப்பட்டதால், தொடரைத் தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவருக்கு மீண்டும் ஓய்வளிக்கப்பட்டது.
இது இந்திய அணியின் தேர்வில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஐந்து போட்டிகளில் வேகப்பந்துவீச்சில் மட்டும் பலர் மாற்றப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் பும்ராவால் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என்பதுதான்.
பும்ரா போட்டிகளை 'தேர்வு செய்து' விளையாடுகிறார் என்ற விமர்சனத்திற்கு, இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் பதிலளித்தார். இது ஒரு நியாயமற்ற கருத்து என்றும், எந்தப் போட்டிகளில் அவரை விளையாட வைப்பது என்பது அணி நிர்வாகத்தின் முடிவு என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பும்ராவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பும்ராவின் காயம் மற்றும் பணிச்சுமை குறித்த கவலைகள் புதிதல்ல. இதற்கு முன்பு 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அனைத்து ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அவர், அதிக ஓவர்கள் பந்துவீசினார். அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்தார். இதன் காரணமாகவே, பிசிசிஐ அவரது பணிச்சுமையை நிர்வகிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர், "ஒவ்வொரு வீரரின் பணிச்சுமையையும் உடற்தகுதிப் பயிற்சியாளர்கள் நிர்ணயிக்க முடியும். ஆனால் பும்ராவின் தேர்வு மட்டும் மருத்துவக் குழுவால் மதிப்பிடப்படும் அவரது முழுமையான உடற்தகுதியைப் பொறுத்தே தேர்வு அமைய வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.
இந்திய அணிக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதுவும் இல்லை. அதே சமயம், மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பும்ரா தவிர்க்க முடியாத வேகப் பந்துவீச்சாளராக இருப்பதால், அவரது உடற்தகுதியை நிர்வகிப்பது பிசிசிஐ-க்கு ஒரு முக்கியச் சவாலாக உள்ளது. அதனால் பும்ரா விரும்பினாலும் இனி நீண்ட டெஸ்ட் தொடரில் அவர் பாதி உடற்தகுதியுடன் ஆடுவது சந்தேகம் தான்.