மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் பும்ரா ஆஸ்திரேலியா தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் முதல் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
இதனால் ரோகித் சர்மாவுக்கு பதில் இனி பும்ராவை முழு நேர டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர் அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அது அணியின் தன்மையை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் கூட பும்ரா காயம் காரணமாக வெறும் பத்து ஓவர் தான் வீசினார். இல்லாதது இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு பெரும் பாதிப்பாக இருந்தது. அப்போது விராட் கோலி தான் அணியை வழிநடத்தினார். இதனால் பும்ராவை கேப்டனாக நியமிப்பதில் சிக்கல் இருக்கிறது.
இந்த தருணத்தில் தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் முழுமையாக பும்பராவுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது. இதன் மூலம் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்க பிசிசிஐ தேர்வு குழு முடிவு எடுத்திருக்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடைபெறும். இந்தத் தொடர் முடிவடைந்து பத்து நாட்களில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதனால் பும்ராவுக்கு ஓய்வே இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஐபிஎல் தொடர் முழுமையாக பும்ரா பங்கேற்றால் அது அவருடைய உடல் தகுதியை பாதிக்கும். இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் காயம் ஏற்பட்டு பாதியில் விலக வாய்ப்பு இருக்கிறது. இதனால் பும்ராவுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க கூடாது என்ற அறிவுறுத்தலை பிசிசிஐ வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இல்லையென்றால் பும்ரா ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மட்டும் பங்கேற்று விட்டு மே மாதத்தில் இருந்து நடைபெறும் போட்டிகளில் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் பும்ரா முழு உடல் தகுதியை பாதுகாக்க முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐபிஎல் தொடரிலிருந்து பும்ரா விலகினால் அதற்கான ஊதியத்தை பிசிசிஐ அவருக்கு வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.