சென்னை: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கடந்த டிசம்பரில் ஒரு பயங்கரமான கார் விபத்தில் இருந்து தப்பித்து தற்போது மீண்டு வருகிறார். இந்நிலையில், அவரை கௌரவிக்கும் பொருட்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணி செய்த காரியம் பிசிசிஐ யை இப்பொது கடுப்பேற்றியுள்ளது. மேலும், இது போன்று இனி செய்ய கூடாது என கண்டிஷனும் போட்டுள்ளது. அப்படி என்ன கண்டிஷன் ? டெல்லி அணி அப்படி என்ன செய்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
கடந்த டிசம்பர் 30, 2022 அன்று, ரிஷப் பந்தின் கார் டெல்லி-டேராடூன் எக்ஸ்பிரஸ்வேயில் டிவைடரில் மோதி தீப்பிடித்தது, இதனால் அவர் கார் கண்ணாடியை உடைத்து வாகனத்தில் இருந்து இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய ரிஷப் மீண்டு வர பலரும் பிரார்த்தனை மேற்கொண்டனர். பிரார்த்தனைகளின் பலனாக, சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த ரிஷப் பந்த் இப்போதுதான் நடக்க ஆரம்பித்து தனது பணிகளை மெல்ல மெல்ல செய்து வருகிறார்.

டெல்லி அணி என்ன செய்தது?
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில், ரிஷப் பந்த் பங்குபெற முடியவில்லை. இருப்பினும், DC அணி, "எப்போதும் ரிஷப் பந்த் தங்கள் அணியுடன் உற்சாகமாக இருக்கிறார்" என்பதை நினைவூட்டும் வகையில், டக்-அவுட்டின் கூரையில் ரிஷப் பந்தின் ஜெர்சி எண். 17 பொறிக்கப்பட்ட ஜெர்சியை தொங்கவிட்டது.இருப்பினும், பிசிசிஐ இந்த செயலை கண்டித்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதைச் செய்வதைத் தவிர்க்குமாறு டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிசிசிஐ சொன்ன காரணம்:
ஒரு வீரருக்கு மிகவும் சோகமான நிகழ்வு ஏற்பட்டாலோ, அல்லது வீரர் Retirement ஆனாலோ, அவரை கௌரவிக்கும் வகையில் இப்படி செய்வது தகுந்தது. ஆனால்,ரிஷப் பந்தோ எதிர்பார்த்ததை விட வேகமாக குணமடைந்து வருகிறார், எனவே இது ஒரு உன்னதமான நோக்கத்துடன் செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சைகைகளைத் தவிர்க்க பிசிசிஐ டெல்லி அணி நிர்வாகத்திடம் கண்டிஷனாக கூறியதாக ஐபிஎல் வட்டாரம் தெரிவித்துள்ளது.
யார் கொடுத்த ஐடியா?
டக்-அவுட்டில் இருந்து ரிஷப் பந்தின் ஜெர்சியைக் தொங்க விட வேண்டும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தான் யோசனை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில், டில்லி கேப்பிடல்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் ஏதாவது ஒரு ஆட்டத்தின் போது , ரிஷப் பந்தை கவரவிக்கும் வகையில் அனைத்து வீரர்களும் அவரின் ஜெர்சி எண் பொறித்த ஜெர்சி அணிந்து விளையாடுவர் என்றும் அறிக்கை ஒன்று கூறுகிறது.