
ஒருமித்த கருத்து
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்திருக்கும் நிலையில், நியூசிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது ஏறக்குறைய உறுதியானது. இதுகுறித்து கிரிக்கெட்.காமிடம் பேசிய ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், "வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்த ஒருமித்த கருத்துக்கு வர பி.சி.சி.ஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், நியூசிலாந்து வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

பெரும் இழப்பு
எனினும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதியில், தங்கள் அணி வீரர்களை கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என்ற முடிவில் விடாப்பிடியாக உள்ளது. இத்தொடர் 3,000 - 4,000 கோடி பிஸ்னஸ் என்பதால், வெளிநாட்டு வீரர்கள் இன்றி போட்டிகள் நடந்தால், தொடரில் சுவாரஸ்யம் இருக்காது என்று பிசிசிஐ எண்ணுகிறது. இதனால், எப்பாடுபட்டாவது வெளிநாட்டு வீரர்களை கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் அணிகளும், வெளிநாட்டு வீரர்கள் இன்றி தொடரை நடத்துவதால் ஏற்படும் இழப்பு குறித்து பிசிசிஐ-யிடம் வரிசையாக முறையிடுவதால், செய்வதறியாது நிற்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் பார்ப்பார்களா?
ஏற்கனவே வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்கள், ஐபிஎல்-லில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துவிட்டது. இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பெரிதாக எந்த இழப்பும் கிடையாது. அதுவே, இங்கிலாந்து அணி ஆடவில்லை என்றால், அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எடுத்துக் கொள்ளுங்கள்.. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இரு இங்கிலாந்து வீரர்களும் அந்த அணியின் இரு கண்கள் எனலாம். இருவருமின்றி அந்த அணி தொடரில் பங்கேற்றால், நிச்சயம் "வியூவர்ஷிப்" குறையும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது, அந்த அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும்.

விடாப்பிடி இங்கிலாந்து
அதுவே, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் நினைத்துப்பாருங்கள். பேட் கம்மின்ஸை 15 கோடிக்கு வாங்கி வைத்திருக்கும், கொல்கத்தா அணியின் அடிநாதமே கலங்கிவிடும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மொயீன் அலி, சாம் கர்ரன் இல்லாமல் பெரும் சேதத்தை சந்திக்கும் வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒவ்வொரு அணிகளும் ஏதாவது ஒரு வகையில் சேதாரத்தை சந்திப்பதில் இருந்து தப்பிக்க முடியாது என்பதால், வெளிநாட்டு வீரர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய கடமை பிசிசிஐக்கு இருக்கிறது. இந்த நிலையில் தான், வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்த ஒருமித்த கருத்துக்கு வர இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய வாரியங்களுடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கிரிக்கெட். காம் தளத்துக்கு ஐபிஎல் அணி ஒன்றின் உரிமையாளர் அளித்த பேட்டி அளித்திருக்கிறார். எனினும், இந்த பேச்சுவார்த்தையில் ஆஸ்திரேலியா ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், இங்கிலாந்து வாரியம் மட்டும் முரண்டு பிடிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், எப்படியாவது அவர்களை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகிகள், முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications