
இந்திய அணியின் காத்திருப்பு
இந்திய அணி கடந்த 15 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் உள்ளது. கடந்தாண்டே இந்த காத்திருப்பு முடிந்திருக்க வேண்டும். ஆனால் கொரோனாவால் கடைசி டெஸ்ட் போட்டி தடைபட்டது. எனவே மீதமுள்ள அந்த ஒரு டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது. இதனுடன் சேர்ந்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளும் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

பயணத்தின் திட்டம்
இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஜூன் 16ம் தேதியன்று இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர். அங்கு ஜூன் 24 முதல் 27 வரை பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜூலை 1 முதல் ஜூலை 17 வரை அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகிறது.

பிசிசிஐ போட்ட திட்டம்
இந்நிலையில் வீரர்களுடன் சேர்ந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட முக்கிய புள்ளிகளும் இங்கிலாந்து செல்கிறது. இதற்கு காரணம் ஐபிஎல் தொடர் தான். 2023ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் நீளத்தை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்காக அனைத்து கிரிக்கெட் வாரியங்களுடனும் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துகிறது. எனவே முதலாவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் முக்கிய ஆலோசனையை நடத்தவுள்ளனர்.

வருடத்திற்கு 2 ஐபிஎல்
இங்கிலாந்து வாரியம் எப்போதுமே இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே ஒருவேளை ஒப்புதல் கொடுத்துவிட்டால், மற்ற வாரியங்களும் ஆதரவுக் கொடுக்கும். இதனால் நேரடியாக அங்கு செல்கிறது பிசிசிஐ. ஏற்கனவே ஆண்டுக்கு 2 ஐபிஎல் நடத்த வேண்டும் என முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ள சூழலில் பிசிசிஐ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications