டெல்லி: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்திற்கு விதித்த 41.97 மில்லியன் டாலர் அபாரதத்தை ரத்து செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இத்தகவலை பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டில் இந்தியாவில் கிரிக்கெட் ஆட வந்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஆனால் வாரியத்திற்கும், வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அணியினர் தொடரை விட்டு பாதியிலேயே வெளியேறினர்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் மேற்கு இந்தியத் தீவுகள் வாரியத்திற்கும் இடையே பிரச்சினை வெடித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் வாரியத்திற்கு பிசிசிஐ 41.97 மில்லியன் டாலர் அபராதம் விதித்தது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் மேற்கு இந்தியத் தீவுகள் வாரிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் இறங்கினர். இதில் தற்போது சுமூக முடிவு காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சஷாங் மனோகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகள் வாரியத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட 41.97 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.
பாதியில் நின்று போன கிரிக்கெட் தொடரை 2017ம் ஆண்டு தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணி இந்தக் கோடையில் 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாட மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் செல்லும் என்றார் மனோகர்.
மேற்கு இந்தியத் தீவுகள் வாரியத் தலைவர் டேவ் காமரூன் கூறுகையில் மனோகர் சொல்லும் அனைத்தையும் ஏற்கிறோம் என்றார்.
கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரம்சலாவில் நடந்த 4வது ஒரு நாள் போட்டிக்குப் பிறகு பாதியிலேயே நாட்டைவிட்டு வெளியேறியது. டெஸ்ட் தொடரில் ஆடவில்லை. ஒரு ஒரு நாள் போட்டியிலும் ஆடவில்லை என்பது நினைவிருக்கலாம்.