
ஐபிஎல் 2021 ஏலம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஐபிஎல் 2020 போட்டிகள் யூஏஇயில் திட்டமிடப்பட்டு சிறப்பான வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடத்தப்படுமா?
முன்னதாக வரும் 20ம் தேதிக்குள் 8 ஐபிஎல் அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட உள்ள வீரர்கள் குறித்த முழுமையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா அல்லது வெளிநாட்டில் நடத்தப்படுமா என்பது குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு
இதுகுறித்து வரும் 10ம் தேதி துவங்கவுள்ள சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரின் இடையில் முடிவெடுக்கப்படும் என்று பரிஜேஷ் படேல் தலைமையிலான ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதத்தில் புதிய ஐபிஎல் அணிகளுக்கான டெண்டர்கள் விடப்படும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 28 வரை தொடர்கள்
இதனிடையே, வரும் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. பிப்ரவரி 5ம் தேதி துவங்கவுள்ள இந்த தொடர் மார்ச் 28 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 10க்கு மேல் துவக்கம்
இந்நிலையில் இடையில் வீரர்களுக்கு இரண்டு வாரங்கள் ஓய்வு அளிக்கப்பட்டு ஏப்ரல் 10ம் தேதிக்கு மேல் ஐபிஎல் 2021 தொடர் திட்டமிடப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021ன் அதிகாரப்பூர்வ துவக்கம் மற்றும் இடம் குறித்து ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு பிசிசிஐ இறுதி முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications