
டி20 உலக கோப்பை
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி அடுத்த வாரத்தில் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.

அக்டோபர், நவம்பரில் நடத்த திட்டம்
கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரத்து செய்யப்பட்டால் 530 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படாவிட்டால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

டி20 உலக கோப்பை குறித்து முடிவு
டி20 உலக கோப்பை தொடரை ஒத்திவைப்பது குறித்து சில தினங்களில் நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக டி20 உலக கோப்பையை ஒத்திவைக்க எந்த நிர்பந்தமும் அளிக்கப்படவில்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ கேள்வி
ஐபிஎல் குறித்து ஐசிசியிடம் விவாதித்துள்ளதாக பிசிசிஐ பொருளாளர் அருண் சிங் துமால் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பையை ஒத்திவைக்க பிசிசிஐ ஏன் நிர்பந்திக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பிட்ட காலத்தில் டி20 உலக கோப்பையை நடத்த ஆஸ்திரேலியா தயாராக இருந்தால் அதை வரவேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐசிசியே இறுதி முடிவு
அதிகமான அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பையை ரசிகர்கள் அற்ற காலி மைதானங்களில் நடத்துவது சிறப்பாக இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டி20 உலக கோப்பை குறித்த எந்த முடிவாக இருந்தாலும் அது ஐசிசியின் தீர்மானமாகவே இருக்கும் என்றம் துமால் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications