மும்பை : 2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்து செப்டம்பர் 5 அன்று அறிவிக்க உள்ளது பிசிசிஐ.
உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச இந்திய அணியில் யார், யார் இடம் பெறுவார்கள் என்ற பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியில் காயத்தில் சிக்கி மீண்டு வரும் கே எல் ராகுலை தேர்வு செய்தால் உலகக்கோப்பை தொடரின் இடையே சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

உலகக்கோப்பை தொடர்
2023 ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 5 முதல் துவங்க உள்ளது. அதற்காக அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகி வருகின்றன. இந்திய அணியும் முழுவீச்சில் தன்னை தயார்படுத்தி வருகிறது.
ஆசிய கோப்பை முன்னோட்டம்
ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உலகக்கோப்பை முன்னோட்டமாக தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று ஆடி வருகின்றன. இந்த தொடரில் வீரர்களின் செயல்பாட்டை பொறுத்து அணித் தேர்வு இருக்கும்.
15 வீரர்கள் கொண்ட அணி
இந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு 30 நாட்களுக்கு முன்னதாக வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐசிசி கூறி உள்ளது. எனவே, பிசிசிஐ விரைவில் இந்திய அணியை அறிவிக்கும் என கூறப்படுகிறது.
உத்தேச அணியில் யார்?
உத்தேச அணியில் இடம் பெறப் போகும் வீரர்கள் பட்டியல் ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. அந்த அணி - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே எல் ராகுல், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), இஷான் கிஷன், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.
கே எல் ராகுல் சிக்கல்
இந்த உத்தேச அணியில் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் கே எல் ராகுல் பெயரும் இடம் பெற்று உள்ளது. அவர் ஆசிய கோப்பை தொடரில் இதுவரை போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதற்கு காரணம், அவருக்கு இன்னும் தொடையில் வலி இருப்பதுதான் என தெரிய வந்துள்ளது. இப்படி இன்னும் காயத்தில் இருந்து மீளாத ஒரு வீரரை எப்படி உலகக்கோப்பை அணியில் சேர்ப்பது என பிசிசிஐ தயக்கத்தில் உள்ளது.
இஷான் கிஷன்?
அதே சமயம், கே எல் ராகுல் அனுபவ வீரர் மற்றும் நம்பிக்கையான விக்கெட் கீப்பர். மிடில் ஆர்டரில் ஏற்கனவே, இந்திய அணி தடுமாறி வரும் நிலையில் ராகுல் அவசியம் என ஒரு தரப்பு வாதம் உள்ளது. ராகுலுக்கு மாற்றாக அணியில் இருக்கும் ஒரே விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மட்டுமே.
அவரது விக்கெட் கீப்பிங் சுமாராகவே உள்ளது. ராகுலை அணியில் எடுத்தால் வேறு ஒரு விக்கெட் கீப்பரை கூடுதலாக அணியில் சேர்க்க முடியாது. அப்படி செய்தால் அது பேட்டிங், பந்துவீச்சில் சிக்கலை ஏற்படுத்தி விடும். எனவே, காயத்தில் இருக்கும் ராகுலை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறது பிசிசிஐ.