மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா, 2027ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வரும்போது 40 வயதைக் எட்டி இருப்பார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திடீரென 'பிரான்கோ டெஸ்ட்' என்ற புதிய உடற்தகுதி சோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
வீரர்களின் உடற்தகுதியை உயர் மட்டத்தில் வைத்திருப்பதே இதன் நோக்கம் என்று கூறப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் கேப்டன் ரோஹித் சர்மாவை ஓய்வை நோக்கித் தள்ளுவதே என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உடற்தகுதி சிக்கல்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, இந்த புதிய சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீரர்களின் ஏரோபிக் திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என பிசிசிஐ கூறுகிறது.
ஆனால், மனோஜ் திவாரி இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். "2027 உலகக் கோப்பைக்கான திட்டங்களில் விராட் கோலியை வெளியேற்றுவது கடினம். ஆனால், ரோஹித் சர்மாவை அவர்கள் வைத்திருப்பார்களா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரான்கோ டெஸ்ட், ரோஹித் சர்மா போன்ற வீரர்களை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டதாகவே நான் கருதுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் அவரை அணியிலிருந்து நீக்க முடியாதபடி செய்துள்ளது. எனவே, உடற்தகுதியைக் காரணம் காட்டி அவரை வெளியேற்றவே இந்த கடினமான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மனோஜ் திவாரி சந்தேகம் கிளப்பியுள்ளார்.
ரக்பி மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் வீரர்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கப் பயன்படும் ஒரு கடுமையான உடற்பயிற்சிதான் இந்த பிரான்கோ டெஸ்ட். இதில் வீரர்கள் குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் மீண்டும் ஓடி முடிக்க வேண்டும். தற்போதுள்ள யோ-யோ டெஸ்ட்டை விட இது கடினமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இதில் வீரர்களுக்கு ஓய்வு நேரம் மிகக் குறைவு.
இந்திய அணியின் புதிய வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏட்ரியன் லீ ரூக்ஸின் பரிந்துரையின் பேரில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த புதிய டெஸ்டை அறிமுகப்படுத்தியுள்ளார். "இந்த பிரான்கோ டெஸ்ட் இப்போது ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது? புதிய தலைமைப் பயிற்சியாளர் வந்தவுடனேயே ஏன் கொண்டுவரவில்லை? இது யாருடைய திட்டம்? ரோஹித் சர்மா தனது உடற்தகுதியில் கடுமையாக உழைக்கவில்லை என்றால், இந்த பிரான்கோ டெஸ்டில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது" என மனோஜ் திவாரி கூறி உள்ளார்.
இந்த நிகழ்வு, 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு மூத்த வீரர்கள் ஓரங்கட்டப்பட்டதை நினைவூட்டுவதாக திவாரி கூறுகிறார். அப்போது 'யோ-யோ டெஸ்ட்' என்ற உடற்தகுதி சோதனை அறிமுகப்படுத்தப்பட்டு, கௌதம் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்கள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதேபோன்ற ஒரு நிலைமை இப்போது ரோஹித் சர்மாவுக்கு உருவாக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விராட் கோலியின் உச்சகட்ட உடற்தகுதி காரணமாக அவருக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், ரோஹித் சர்மாவால் இந்த புதிய 'பிரான்கோ' தடையைத் தாண்ட முடியுமா என்பதே தற்போதைய பெரிய கேள்வி. 2027 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தனது கனவை ரோஹித் சர்மா வெளிப்படுத்தியுள்ள நிலையில், பிசிசிஐயின் இந்த நடவடிக்கை அவரது கனவுக்கு வேட்டு வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.