மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், விஜய் ஹசாரே டிராபி போன்ற உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி ரன் குவித்தார். விராட் கோலி சேஸிங்கில் ஒரு அரைசதம் அடித்தார். ஆனாலும், அது மட்டுமே போதாது, உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ உறுதியாக இருக்கிறது. இந்தத் திடீர் உத்தரவு, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் ஜூன் 29, 2024-ல் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்தும், மே 2025-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றனர். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர்கள் விளையாடி வருகின்றனர். கடைசியாக அக்டோபர் 2025-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினர்.
இரண்டு முக்கிய வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால், அவர்களுக்குப் போதுமான போட்டி அனுபவம் கிடைக்காது என பிசிசிஐ கருதுகிறது. சர்வதேசப் போட்டிகளின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க, தொடர்ந்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பது அவசியம் என்பதால், இந்த முடிவைப் பிசிசிஐ எடுத்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிசிசிஐ-யும், அணி நிர்வாகமும் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக விளையாட விரும்பினால், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதைத் தெரிவித்துள்ளனர். இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றதால், போட்டிக்குத் தயாராக இருக்க அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது அவசியம்" என்று தெரிவித்துள்ளன.
பிசிசிஐ-யின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா, வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்து, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் (MCA) தனது முடிவை உறுதி செய்துள்ளார். மேலும், நவம்பர் 26-ல் தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரிலும் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதாகத் தெரிகிறது.
ஆனால், மற்றொரு மூத்த வீரரான விராட் கோலி, இந்தத் தொடரில் பங்கேற்பது குறித்து இதுவரை எந்தவிதமான தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை. கோலி கடைசியாக 2010-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ம் தேதி டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுவாரஸ்யமாக, கோலி கடைசியாக ஆடிய அந்தப் போட்டியில், தற்போதைய பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அவருடன் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்தனர்.
நவம்பர் 30-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளதால், சையத் முஷ்டாக் அலி தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆஸ்திரேலிய தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதுடன், உலகின் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாகவும் உயர்ந்த ரோஹித் சர்மாவின் இடம் தென்னாப்பிரிக்கத் தொடரில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
பிசிசிஐ-யின் இந்த புதிய கொள்கை, இனிவரும் காலங்களில் மூத்த வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால், தங்களது திறமையையும், உடற்தகுதியையும் உள்ளூர் போட்டிகளில் நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. அனைவரின் பார்வையும் தற்போது விராட் கோலியின் முடிவை நோக்கியே உள்ளது.