சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்துவது சாதாரணமல்ல என்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகளை எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சொந்த மண்ணில் மோசமாக தோல்வியடைந்த பஞ்சாப் அணிக்கு, சென்னையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது. இதனை பஞ்சாப் அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சென்னை அணியின் ரசிகர்களும் பஞ்சாப் அணி வீரர்களை பாராட்டி வருகின்றனர்.
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து சென்னை அணியை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. இது எங்களின் அணியின் போராட்ட குணத்தையும், வீரர்களின் மன உறுதியையும் காட்டுகிறது. டாஸை மறந்துவிட்டு தான் களமிறங்கினோம். எங்கள் பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் எனக்கு திருப்தியாக அமைந்தது.
சென்னை அணியை சரியான இலக்கில் கட்டுப்படுத்தினோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கேப்டனாக என்னை பொறுத்தவரை லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா உள்ளிட்டோர் அதிக ஓவர்கள் விளையாட வேண்டும் என்பதே விருப்பம். லிவிங்ஸ்டன் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார். அனைவரும் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.