பெங்களூர்: 8 வருடங்களுக்கு பிறகு உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ஒன்றில் (விஜய் ஹசாரே) விளையாடுகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி. அவர் சார்ந்துள்ள ஜார்கண்ட் அணியும், ஜம்மு காஷ்மீர் அணியும் நாளை பெங்களூரில் மோதுகின்றன. இந்த போட்டியை காண டிக்கெட் கட்டணம் கிடையாது.
உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜார்கண்ட்-ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதும் போட்டி, பெங்களூர்-தும்கூர் சாலையிலுள்ள ஆலூர் என்ற பகுதியிலுள்ள கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. வருண் ஆரோன் தலைமையிலான, ஜார்கண்ட் அணிக்காக டோணி விளையாடுகிறார்.

டோணி 8 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் முதல்முறையாக உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆடுகிறார். ஆலூர் ஸ்டேடியத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் போட்டிக்கு தயாராக டோணிக்கு இந்த உள்நாட்டு தொடர் உதவும் என்று எதிர்பார்க்கலாம்.