3வது இடத்தில் டெல்லி அணி
ஐபிஎல் 2021 தொடரின் முக்கிய அணிகளில் ஒன்றாக டெல்லி கேபிடல்ஸ் அணி மாறியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் அந்த அணி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் தனது 5வது போட்டியில் மோதவுள்ளது.
20 நாட்கள் முடக்கம்
இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 20 நாட்களாக ஹோட்டல் அறையில் முடங்கியிருந்த அந்த அணியின் ஆல்-ரவுண்டர் அச்சர் படேல் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அணியின் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றுள்ளார்.
பயிற்சியில் ஈடுபட அறிவுறுத்தல்
இந்நிலையில் அணியின் கோச் ரிக்கி பாண்டிங் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் இருவரும் பயிற்சியின்போது தன்னுடைய உடல் ஒத்துழைக்கும் வகையில் பயிற்சிகளில் ஈடுபடும்படி தனக்கு அறிவுறுத்தியுள்ளதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார். தற்போது எதை பற்றியும் யோசிக்காமல் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே மகிழ்ச்சி
20 நாட்கள் எதையும் செய்யாமல் அறைக்குள் ஒடுங்கியிருந்தது மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ள அக்சர் படேல், தன்னுடைய சக அணி வீரர்களை சந்திப்பது அவர்களுடன் பயிற்சி மேற்கொள்வது சிறப்பானது என்றும் கூறியுள்ளார். தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது ஏற்பட்ட மகிழ்ச்சி தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றியால் ஊக்கம்
இந்த 20 நாட்களில் தான் தொடர்ந்து போட்டிகளை மட்டுமே பார்த்ததாகவும் தன்னுடைய அணியின் வெற்றித் தருணங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் இதன்மூலம் தனக்கு சிறப்பான ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பயிற்சிகளை மருத்துவர்களின் அறிவுரையின்படி மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.