ஹர்பஜன்-சைமண்ட்ஸ் இடையிலான பூசலைத் தீர்த்து வைத்த சச்சின்
மெல்போர்ன்: ஹர்பஜன் சிங் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இடையிலான நீண்ட நாளைய பூசல் தீர்ந்து இருவரும் தற்போது நட்பாக பழகி வருகின்றனர். இவர்களுடையே மோதலைத் தீர்த்து வைத்தது சச்சின் டெண்டுல்கர்.

2008ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதிய அப்போட்டியில் ஹர்பஜன் சிங்குக்கும், சைமண்ட்ஸுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.
தன்னைப் பார்த்து குரங்கு என்று ஹர்பஜன் இனவெறியுன் கூறியதாக சைமண்ட்ஸ் புகார் கூற, ஐசிசி விசாரணையில் குதித்தது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியம் களம் இறங்கவே கிரிக்கெட் உலகமே படு சூடானது.
இந்த சர்ச்சை ஓய்ந்த பின்னரும் கூட சைமண்ட்ஸ், ஹர்பஜன் இடையிலான மோதல் மட்டும் தொடர்ந்து நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது.
தற்போது இந்த நெருப்பை அன்பு என்னும் தண்ணீர் ஊற்றி அணைக்க உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்பஜனும், சைமண்ட்ஸும் இடம் பெற்றுள்ளனர். இதுதான் அவர்களது பகைமையை மறந்து நட்பு துளிர்க்க காரணமாக அமைந்தது.
இந்த நட்பு உருவாக சச்சின் பெரும் உதவியாக இருந்தார். இதன் விளைவாக ஹர்பஜனும், சைமண்ட்ஸும் நட்புடன் பழகி வருவதாகவும், அவர்களுக்கு இடையே இருந்த பூசல் போய் விட்டதாகவும் ஆஸ்திரேலியன் என்ற இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications