மும்பை : உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் என்று கேட்டால் நாம் எல்லோரும் தோனி, விராட் கோலி, சச்சின் என மிக எளிதாக கூறி விடுவோம்.
இவர்கள் மூவருமே ஆயிரம் கோடி முதல் மூவாயிரம் கோடி வரை சொத்து வைத்திருக்கக் கூடும்.
ஆனால், இவர்கள் எல்லோரையும் விட பல மடங்கு அதிக சொத்து வைத்திருந்த ஒரு கிரிக்கெட் வீரர் இதே இந்தியாவில் வாழ்ந்து இருக்கிறார். ஆம், அவர் பெயர் பூபிந்தர் சிங்.

யார் இந்த பூபிந்தர் சிங்? : பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் இருந்த பெரும் பணக்கார அரச குடும்பத்தில் இவரும் ஒருவர். பாட்டியாலா அரசர் என எல்லோராலும் அறியப்படும் பூபிந்தர் சிங் தனது 9 வயதிலேயே அரசராக முடி சூட்டப்பட்டார். அவர் எப்போதும் மிகவும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.
முதல்தர கிரிக்கெட் : இவர் தன் 20 வயதிலேயே முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அப்போது இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். தற்போது உள்ள பதிவுகளின்படி அவர் 27 போட்டிகளில் ஆடி 643 ரன்கள் எடுத்துள்ளார். பகுதி நேர பந்துவீச்சில் 2 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார்.
சொந்த விமானம் : சச்சின், கோலி, தோனி கூட சொந்த விமானம் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், முதன் முதலில் சொந்த விமானம் வைத்திருந்த கிரிக்கெட் வீரர் பூபிந்தர் சிங் தான். தன் ஆட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனக்கென ஒரு விமான ஓடுதளத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
மிகப்பெரிய நகை வர்த்தகம் : உலகின் பாரம்பரியமிக்க நகை நிறுவனமான கார்டியர் (Cartier), இதுவரை செய்த வர்த்தகத்திலேயே மிகப் பெரியது பூபிந்தர் சிங் உடன் மேற்கொண்ட வர்த்தகம் தான். சுமார் 21,000 கோடி ரூபாய் அளவிற்கு ஒரே நேரத்தில் அவர் நகை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு நகைகளை வாங்கிக் குவித்து இருக்கிறார் அவர்.
நகைகள் மதிப்பு : இந்தியாவின் அதிக விலை கொண்ட நெக்லஸ் ஆன பாட்டியாலா நெக்லஸ் இவர் வசம் தான் இருந்தது. மேலும், நகைகள், ரத்தினங்கள் என வாரிக் குவித்து இருந்தார் பூபிந்தர் சிங். இவ்வளவு நகைகள் வாங்கிய அவருக்கு ஐந்து மனைவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரம் கோடி : அவர் வாழ்ந்த மாளிகை மட்டுமே இன்றைய மதிப்பில் சுமார் 350 கோடி இருக்கும். அவரின் மற்ற சொத்துக்கள் எவ்வளவு, அவை இன்றைய மதிப்பில் எத்தனை ஆயிரம் கோடிகள் இருக்கும் என்பது தெரியவில்லை. இவர் 1938இல் தான் 46 வது வயதில் இறந்தார்.