அதை எப்படிங்க என் வாயாலே சொல்வேன்.. இப்ப நினைச்சா கூட புல்லரிக்கும்.. புவனேஷ்வர் குமார்
சென்னை: சச்சின் டெண்டுல்கரை டக் அவுட் செய்த அந்த நிமிடத்தை இன்னும் கூட என்னால் மறக்க முடியவில்லை. அது எப்படி நடந்தது என்ற ஆச்சரியத்திற்கு இன்று வரை எனக்கு விளக்கம் தெரியவில்லை என்று கூறியுள்ளார் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்.
Recommended Video
அவருக்கு 19 வயதாக இருக்கும்போது, 2009ல் நடந்த முதல் தர போட்டி ஒன்றில்தான் சச்சினை டக் அவுட் செய்தார் புவனேஷ்வர் குமார். அப்போது உத்தரப் பிரதேச அணிக்காக ஆடி வந்தார் புவனேஷ்வர். தனது பந்து வீச்சின் 14வது பந்தில் சச்சினை அவர் டக் அவுட் செய்தார்.
இந்த சம்பவம் நடந்து இப்போது 11 வருடங்களாகி விட்டது. ஆனால் இன்னும் கூட சச்சினை டக்அவுட் செய்த ஆச்சரியத்திலிருந்து விடுபடாமல் இருக்கிறாராம் புவனேஷ்வர் குமார். அதை நினைச்சால் இப்பக் கூட புல்லரித்து விடுமாம்.

புல்லரிக்குது
இதுகுறித்து புவனேஷ்வர் கூறுகையில், அது ஒரு அதிர்ஷடமான தருணம். மறக்க முடியாத நாள். வார்த்தைகளால் அதை விவரிக்க முடியவில்லை. இப்போது நினைத்தால் கூட கூஸ்பம்ப்ஸ் ஆகும். இதுமாதிரியான தருணங்கள் எல்லோருக்கும் கிடைக்காது. அதை விவரிக்கவும் முடியாது. சச்சினின் அந்த விக்கெட் கிடைக்க முகம்மது கையிபும் முக்கியக் காரணம். அவர்தான் சரியான இடத்தில் பீல்டரை நிறுத்தினார் என்றார்.

கையிப் புத்திசாலித்தனம்
அது ஒரு கட்டர் பந்து. சரியான லைனில் போனது. மேலும் கையிப் யாரும் எதிர்பாராக்காத இடத்தில் ஒரு பீல்டரை நிறுத்தினார். அப்படி யாருமே நிறுத்த மாட்டார்கள். எனவே அது முதலில் எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் பந்து சரியாக அந்த பீல்டர் கைக்குப் போனபோதுதான் கையிபின் புத்திசாலித்தனம் புரிந்தது. எனவே சச்சின் விக்கெட் வீழ்த்தியதில் கையிபுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

சச்சினுடன் லிப்ட்டில்
இந்த போட்டிக்காக நாங்கள் அனைவருமே ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தோம். எனது அறைக்குப் பக்கத்து அறையில்தான் சச்சின் இருந்தார். அதன் பிறகு நான் எனது அறைக்குத் திரும்பினேன். சச்சின் தனது அறையிலிருந்து வெளியேறி லிப்ட்டுக்குப் போனபோதுதான் நானும் வந்தேன். அவருடன் லிப்ட்டில் பயணித்தபோது சச்சினுக்குப் பந்து வீசப் போகிறோம் என்ற எண்ணம் மனதில் அலை மோதியது. அவர் போனில் பிசியாக பேசிக் கொண்டிருந்தார்.

பெரும் மகிழ்ச்சி
சச்சினுக்குப் பந்து வீசியபோது கூட நான் அவரை அவுட் செய்ய வேண்டும் என்ற நினைப்பிலேயே இல்லை. அவருக்கு பந்து வீசுகிறோம் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஆனால் அவர் டக்-அவுட் ஆனபோதுதான் என்னையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு வெறும் 19 வயதுதான். உலகின் மிகப் பெரிய பேட்ஸ்மேனுக்குப் பந்து வீசும் அந்தப் பையனிடம் பெரிதாக என்ன திட்டம் இருந்திருக்க முடியும். அதே நிலையில்தான் நானும் இருந்தேன் என்று நெகிழ்ந்துள்ளார் புவனேஷ்வர் குமார்.


Click it and Unblock the Notifications