மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முக்கியமான ஆட்டம் நடைபெறுகிறது. பலம் வாய்ந்த மும்பை அணியும் பெங்களூர் அணியும் மோதுகின்றனர். ஐந்து அணிகள் ஒரே புள்ளிகளுடன் இருப்பதால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறும்.
பெரும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார். மும்பை அணி கடைசியாக விளையாடிய இரண்டு ஆட்டங்களில் சேசிங் செய்த போது தான் வென்றிருக்கிறார்கள்.

மும்பை பந்துவீச்சு தற்போது மோசமாக இருப்பதால் சேசிங் செய்வது தற்போது சிறந்த முடிவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற பிறகு பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, நாங்கள் பெரிய இலக்குகளை வெற்றிகரமாக துரத்தி இருக்கிறோம். இந்த ஆடுகளமும் பார்ப்பதற்கு பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருக்கிறது.
இலக்கு எங்கள் முன் இருக்கும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது அது சாதகமாக தான் உள்ளது. இது சராசரியான மும்பை ஆடுகளமாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் மட்டும் ஆடுகளம் காய்ந்திருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியவில்லை

நாங்கள் எப்போதுமே புள்ளி பட்டியலை பார்த்து விளையாட மாட்டோம். எப்போதும் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் புள்ளி பட்டியல் தானாக மாறும். இன்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆச்சர் கிடையாது. அவருக்கு பதிலாக கிறிஷ் ஜார்டன் மும்பை அணிக்காக அறிமுகமாகிறார் என்று ரோகித் சர்மா கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆர் சி பி கேப்டன் டுப்ளசிஸ், நாங்கள் இங்கு சேசிங் செய்ய தான் இருந்தோம். தற்போது பெரிய இலக்கை நிர்ணயித்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்க உள்ளோம். முதல் நான்கு இடங்களை பிடிக்க பல்வேறு அணிகள் போட்டி போடுகிறார்கள். இது நிச்சயமாக நெருக்கடியான கட்டம் தான். இன்று நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் தான் வெற்றி பெற முடியும். இன்றைய ஆட்டத்தில் கரன்சர்மாவுக்கு பதில் நாங்கள் விஜயகுமார் விஷாகை சேர்த்து இருக்கிறோம் என்று அவர் கூறினார்.