மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டி வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மற்றும் முதலாவது அரையிறுதி போட்டி ஆகியவை துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளும் வரும் 12ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி கெடு விதித்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் லாகூர் கிரிக்கெட் மைதானம் புனரமைக்கப்படுகிறது. சர்வதேச பார்வையாளர்கள் போட்டிகளை பார்க்கும் வகையில் மைதானங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான கட்டுமான பணிகள் தற்போது மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இன்னும் 40 நாட்கள் தான் இருக்கிறது. ஆனால் இன்னும் மைதானங்கள் கட்டுமான பணி முழுமை பெறவில்லை. இதனால் வரும் ஜனவரி 27 ஆம் தேதிக்குள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கட்டி முடிக்கவில்லை என்றால் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்ற ஐசிசி முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் போட்டியை நடத்துவதற்காக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மைதான கட்டுமான பணிகளை மந்த கதியில் நடத்தி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி போட்டிகள் தொடங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மைதானம் கட்டுமான பணிகள் அவசர கதியில் நடந்தால் பாதுகாப்பு பிரச்சனையும் ஏற்படும் என்பதால் ஐசிசி அதிகாரிகள் முறையான சோதனை நடத்திய போட்டியை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மைதானங்களை சரியான முறையில் தயார்படுத்தவில்லை என்றால் போட்டிகள் அனைத்தும் துபாய், சார்ஜா மற்றும் அபுதாபிக்கு மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.