லண்டன்: ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டிராபியை வென்றதே இந்திய அணி சிறந்த வெற்றி என்று கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் நீண்ட நாட்களாக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எந்த அணிக்கும் சாதகம் இருக்கக் கூடாது என்பதற்காக பொதுவான மைதானமான இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஆட்டம் நடக்கவுள்ளது. இரு அணிகளிலும் ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளது. இதனால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நோக்கி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், நியூசி. முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் மற்றும் இங்கிலாந்து ஜாம்பவான் இயான் பெல் ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஒருங்கிணைத்து அனைவரிடமும் கேள்விகளை எழுப்பினார்.
இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் சிறந்தது. ஒரு தலைவனாக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு பவுலராக சவால் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதேபோல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே புதிய ரைவல்ரி உருவாகியுள்ளது. இரு அணிகள் எப்போது மோதிக் கொண்டாலும் ஆட்டம் பரபரப்பாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி ஆடிய போட்டிகளில் சிறந்த ஆட்டமென்றால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியது தான்.
ஏனென்றால் மூத்த வீரர்கள் பலரும் காயத்தால் விலகினார்கள். நானும் முதல் இரு போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின், உடனடியாக எழுச்சி பெற்றோம். ஒவ்வொரு இளம் வீரரும் தங்களின் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்கள். அந்த வெற்றி தான் இந்திய அணியின் ஹைலைட் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.