ஜடேஜா அஸ்வின் புறக்கணிப்பு
ஜடேஜா மற்றும் அஸ்வின் நீண்ட காலமாக குறைந்த ஓவர் போட்டிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, டெஸ்ட் வீரர்களாக மாறினார்கள். இதில் ஜடேஜா டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பின்றி சில காலம் இருந்தார். நீண்ட கால போராட்டத்துக்கு பின் ஜடேஜா இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் ஆடினார். அஸ்வின் 2017 வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் இன்னும் ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை.
கோலியின் முதல் விருப்பம்
இவர்களுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பிடித்து ஆடி வருகின்றனர். குல்தீப் சமீபத்தில் டெஸ்ட் போட்டியிலும் ஆடி வருகிறார். கோலி இவர்களையே தன் முதல் விருப்பமாக வைத்திருக்கிறார். இவர்கள் தொடர்ந்து விக்கெட்கள் எடுத்து தங்களை நிரூபித்தும் வருகிறார்கள். எனினும், அஸ்வின், ஜடேஜா ஒரு வகையில் இவர்களை விட சிறந்தவர்கள் என கூறுகிறார் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி.
முடிவில் தெரிய வேண்டும்
இது பற்றி பேசிய பிஷன் சிங் பேடி, "கேப்டனுக்கு சில விருப்பங்கள் இருப்பது சரிதான். ஆனால், அது முடிவுகளில் தெரிய வேண்டும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவில் மட்டும் அந்த முடிவுகள் கிடைத்தால் போதாது" என கூறியுள்ளார்.
குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்
"அஸ்வின், ஜடேஜா இருவரையும் மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என நான் உறுதியாக நினைக்கிறேன். கத்துக்குட்டிகளான சாஹல் மற்றும் குல்தீப் இருவரும் ஐபிஎல் மூலம் கிடைத்தவர்கள். இவர்கள் இடையே பெரும் வித்தியாசம் உள்ளது" என்கிறார் பிஷன் சிங் பேடி. இந்திய அணியில் அணித் தேர்வு இப்போது சரியில்லை என்பதே உண்மை.