மும்பை: பாஜக ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று கிட்டத்தட்ட அனைத்து எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளும் கூறி விட்டன. இந்த நிலையில் மோடி தலைமையிலான பாஜகவுக்காக உ.பியில் கடுமையாக உழைத்தவரும், பல்வேறு சர்ச்சைகளின் நாயகனுமான அமீத் ஷா, அடுத்து வேறு ஒரு முக்கிய விஷயத்துக்குக் குறி வைத்துள்ளார்.
அதாவது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் பதவிக்கு அவர் குறி வைத்துள்ளார். தற்போது அமீத் ஷா, குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். பாஜக ஆட்சியைப் பிடித்ததும் இவர் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐந்து பிராந்தியங்களுக்கு தனித் தனியாக துணைத் தலைவர் பதவி உள்ளது. அதில் ஒரு பதவியை அதாவது குஜராத்தை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் துணைத் தலைவராக அமீத் ஷா நியமிக்கப்படப் போகிறாராம்.
தற்போது இப்பதவியில் மும்பை கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த ரவி சாவந்த் இருக்கிறார். இதுதொடர்பான முடிவு செப்டம்பரில் நடைபெறும் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாம்.
குஜராத் அமைச்சராக இருந்தவர் அமீத் ஷா. போலி என்கவுண்டர் வழக்குகளில் சிக்கி அவர் பதவியை இழந்தார். குஜராத்துக்குள் நுழையவும் இவருக்கு கோர்ட் தடை விதித்தது. தற்போது லோக்சபா தேர்தலில் உ.பி மாநிலத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பம்பரம் போல சுழன்று செயல்பட்டு வந்தார்.
அரசியல் தவிர கிரிக்கெட் சங்க பொறுப்புகளிலும் நீண்ட காலமாக இருந்து வருபவர் அமீத் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியைப் பிடித்து ஷாவும் கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவராகி விட்டார், அது லலித் மோடிக்கு ரொம்ப ஈஸியாகி விடும். அவருக்கு கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்துள்ளது. ஆனால் மோடியும் ஷாவும் முக்கியப் பதவிகளுக்கு வரும்போது இந்தத் தடையை நீக்க லலித் மோடி லாபிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதை வைத்து மீண்டும் லலித் மோடி லைம்லைட்டுக்கு வருவது உறுதி என்கிறார்கள்.