மும்பை :நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி யாருமே எதிர்பார்க்காத வகையில் முற்றிலும் தோல்வியை தழுவி தொடரை இழந்தது.
இந்த சூழ்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்றால் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும்.

ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகப்பெரிய கடினமான காரியமாக இருக்கிறது. இந்த சூழலில் இந்தியா 4 க்கு பூஜ்ஜியம் என்று ஜெயிப்பதெல்லாம் கனவில் கூட நடக்காது. இந்த நிலையில் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற தொடர்களை முழுமையாக ஒயிட்வாஷ் ஆன நிலையில், ஆஸ்திரேலியாவிலும் அதேபோல் ஒரு தோல்வியை தழுவும் என்று ரசிகர்கள் கணித்து இருக்கிறார்கள்.
இந்த சூழலில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் எல்லாம் தோற்கடிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் நான் நிலவுக்கு மேலே சென்று குதிப்பேன். ஆனால் அப்படி நடைபெற வாய்ப்பு இல்லை. மிஞ்சி மிஞ்சி போனால் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.
இந்த சூழலில் நான், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து யோசிக்க மாட்டேன். என்னுடைய முழு கவனமெல்லாம் ஆஸ்திரேலிய தொடரில் நாம் எப்படி விளையாட போகிறோம் என்பதில்தான் இருக்கும். ஒன்றுக்கு பூஜ்ஜியம், இரண்டுக்கு பூஜ்ஜியம், மூன்றுக்கு பூஜ்ஜியம்.
இல்லை மூன்றுக்கு ஒன்று, இரண்டுக்கு ஒன்று என தொடரின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று தொடரை கைப்பற்றுங்கள். அதை தான் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.