பெர்த் : ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் தான் இருக்கின்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால், மட்டுமே தகுதி பெற முடியும்.
இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக இருந்தாலும், பேட்டிங் தான் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த சூழலில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் விராட் கோலி தான் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்திருக்கிறார்.

இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் விளையாடி உள்ள விராட் கோலி மொத்தம் 1352 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், நான்கு அரை சதம் அடங்கும். இந்த சூழலில் விராட் கோலிக்கு ஆறு ரெக்கார்டுகள் படைக்க தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் ரெக்கார்டை முறியடிக்க விராட் கோலிக்கு வெறும் 458 ரன்கள் தான் தேவைப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு சதங்கள் அடித்தார். 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இதற்கு முன்பு ஜாக் ஹாப் என்ற வீரர் ஒன்பது சதங்கள் அடித்து இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். இதேபோன்று பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி 574 ரன்கள் அடித்தால், ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு சேரும்.
இதேபோன்று விராட் கோலி இரண்டாவது டெஸ்டில் விளையாடும் போது ஆஸ்திரேலியா மண்ணில் 100 சர்வதேச போட்டிகள் விளையாடிய சச்சினுக்கு பிறகு இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி 102 ரன்கள் அடிக்க வேண்டும். அவ்வாறு அடித்தால் அந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பிரைன் லாராவின் சாதனையை முறியடிப்பார்.இதேபோன்று அடிலெய்டில் விராட் கோலி ஒரு சதம் அடித்தால் அந்த மைதானத்தில் அதிக சதம் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமை அவருக்கு சேரும்.