மும்பை: இந்திய விளையாட்டு வீரர்களின் பிராண்டு மதிப்பு குறித்த புள்ளிவிவரம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் கிரிக்கெட் வீரர்கள் பலரையும் அதிரடியாக முந்தி இருக்கிறார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பிராண்ட் மதிப்புக்கு இணையாக அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.
மேலும், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், பும்ரா போன்ற முன்னணி இந்திய வீரர்களின் மதிப்பை விட நீரஜ் சோப்ராவின் மதிப்பு அதிகரித்து உள்ளது. அதேபோல, இந்திய அளவில் தோனிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரது பிராண்ட் மதிப்பு விராட் கோலிக்கு இணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விராட் கோலியின் பிராண்ட் மதிப்பில் 50 சதவீதத்தை கூட தோனியால் எட்ட முடியவில்லை என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

இந்திய விளையாட்டு வீரர்களின் பிராண்ட் மதிப்பு பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் வீரர்கள் -
1. விராட் கோலி- 1,912 கோடி.
2. எம்எஸ் தோனி- 766 கோடி.
3. சச்சின் டெண்டுல்கர் - 766 கோடி.
4. ரோஹித் சர்மா - 344 கோடி.
5. நீரஜ் சோப்ரா- 335 கோடி.
பல ஆண்டுகளுக்கு முன்பே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் டெண்டுல்கரின் பிராண்ட் மதிப்பும், இப்போதும் ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனியின் மதிப்பும் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 766 கோடி மதிப்புடன் உள்ளனர்.
அதே சமயம் இளம் தலைமுறையினர் இடையே அதிக ரசிகர்களை கொண்ட விராட் கோலியின் பிரான்ட் மதிப்பு 1912 கோடியாக உள்ளது. விராட் கோலிக்கு நிகரான கிரிக்கெட் வீரராக அறியப்படும் ரோஹித் சர்மாவின் பிராண்ட் மதிப்பு 344 கோடிகளாக மட்டுமே உள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு ஹர்திக் பாண்டியா இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தார். அவரை முந்தி இருக்கும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 335 கோடி மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.
2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதை அடுத்து அவரை இளைஞர்கள் பலரும் பின் தொடரத் துவங்கினர். அதன் பின் அவர் பங்கேற்ற ஒவ்வொரு தொடரிலும் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்று வந்தார். 2024 ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதை அடுத்து அவரது பிராண்ட் மதிப்பு உயர்ந்துள்ளது.