ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணி சமீபத்தில் ஜமைக்காவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெறும் 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவு செய்தது. மேலும், டெஸ்ட் தொடரை 3-0 என இழந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, தங்கள் அணியின் சரிவுக்கு ஐபிஎல் மற்றும் பிற டி20 லீக்குகள் தான் காரணம் என மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய பிரையன் லாரா, "எங்கள் காலத்தில் நாங்கள் முதல் தர கிரிக்கெட் விளையாடினோம், சிலர் கவுண்டி கிரிக்கெட் கூட விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர முயற்சித்தோம். ஆனால் இப்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு படிக்கட்டாக, வெளிநாடுகளில் டி20 லீக் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்துகிறோம். இது வீரர்களின் தவறு அல்ல" என்று குறிப்பிட்டார்.
இந்த பேச்சின்போது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லாய்ட் உடனிருந்தார். அவர், கிரிக்கெட்டில் "பிக் த்ரீ" எனப்படும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளைத் தாக்கிப் பேசினார். இந்த மூன்று நாடுகளால் தான் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் கிரிக்கெட்டில் முன்னேற முடியாமல் பின்தங்கி இருப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
டேவிட் லாய்ட் பேசியதாவது - "பெரிய மூன்று நாடுகள் அனைத்துப் பணத்தையும் எடுத்துக்கொள்கின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அனைத்துப் பணத்தையும் எடுத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு பெரிய ஒளிபரப்பு ஒப்பந்தங்கள் கிடைக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகள் அவர்களுடன் போட்டியிடுவதற்கு இன்னும் சமமான பணப் பகிர்வு இருக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தலைவர் டாக்டர் கிஷோர் ஷாலோ, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க முன்னாள் ஜாம்பவான்களை அணுகியுள்ளார். "எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களான சர் கிளைவ் லாய்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா ஆகிய மூவருக்கும் நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் ஏற்கெனவே கமிட்டியில் உள்ள டாக்டர் ஷிவ்நரைன் சந்தர்பால், டாக்டர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ், இயான் பிராட்ஷா ஆகியோருடன் இணைவார்கள்" என்று ஷாலோ ஒரு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், "ஏமாற்றம் இயல்பானது என்றாலும், இந்த தருணம் எங்கள் எதிர்கால பயணத்தை முடிவு செய்ய அனுமதிக்கக்கூடாது. நாங்கள் ஒரு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க முயற்சி செய்கிறோம். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணி, முன்பு கிரிக்கெட் உலகின் ஒரு சக்தியாக இருந்த உணர்வைத் மீண்டும் பெற முயல்கிறோம். எங்களுக்கு எங்கள் வீரர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறினார்.