டப்ளின்: 11 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நட்சத்திர வீரர் பும்ராவின் செயல்பாடுகள் எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நட்சத்திர வீரர் பும்ரா தான். 11 மாதங்களுக்கு மேலாக காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பும்ரா ஒய்வில் இருந்தார். இவர் எப்போது கிரிக்கெட் களம் திரும்புவார் என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வம் இருந்தது.

ஏனென்றால் பும்ரா இல்லாததால் இந்திய அணி ஆசியக் கோப்பை, டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்று ஏராளமான தொடர்களில் பெரும் அடி வாங்கியது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடரும் நெருங்கியுள்ள சூழலில், பும்ராவின் வருகை ரசிகர்களிடையே அதிக விவாதத்தை ஏற்படுத்தியது. மீண்டும் அதே வேகம் இருக்குமா என்ற சந்தேகங்கள் எழுந்தன.
இந்த நிலையில் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா, தரமான கம்பேக்கை கொடுத்தார். இருப்பினும் அயர்லாந்து அணிக்கு எதிராக விக்கெட்டுகள் வீழ்த்துவது எளிது தான் என்று ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் பும்ராவின் லைன் மற்றும் லெந்த் பற்றிய விவாதம் ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் மட்டும் பும்ரா 16 டாட் பால்களை வீசி இருக்கிறார். 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை மட்டும் விட்டுக்கொடுத்திருக்கிறார். இதன் மூலமாகவே பும்ரா ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராகிவிட்டார் என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் பும்ராவின் ஸ்பெல்கள் அனைத்து 8 ஓவர்கள் முதல் 12 ஓவர்கள் ஸ்பெல்லாக இருந்திருக்கிறது.
இந்த டி20 தொடர் வெறும் பும்ராவுக்கான கடைசி கட்ட பயிற்சி களமாகவே பிசிசிஐ பார்த்துள்ளது. இதனால் பும்ரா காயத்திற்கு முன் எப்படி சென்றாரோ, அப்படியே மீண்டு வந்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.