நெருங்கும் நாட்கள்.. பொறுப்பான பிள்ளையாய்.. 'தடுப்பூசி' போட்டுக் கொண்ட பும்ரா
டெல்லி: மூன்றரை மாத இங்கிலாந்து சுற்றுப்பயணம் கண்ணுக்கு எதிரே நிற்கும் சூழலில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி போடத் துவங்கியுள்ளனர்.
இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி, அடுத்த மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

18 நாட்கள்
இந்த தொடருக்காக, இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பு, மும்பையில் வரும் மே 25 முதல் இந்திய வீரர்கள் அனைவரும் பயோ-பபுளில் இணைய உள்ளனர். அதில் சரியாக 8 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள். இந்த தனிமைப்படுத்துதலின் போது 3 நாள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு ஜூன் 2ம் தேதி இங்கிலாந்துக்கு கிளம்புகிறார்கள். அங்கு சென்றதும் இந்திய வீரர்கள் மேலும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளார்கள்.

டூர் ரத்து
அதே சமயம், மும்பைக்கு வந்து சேரும் இந்திய வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் இங்கிலாந்து செல்வதை மறந்துவிட வேண்டும் என்று பிசிசிஐ கூறியிருந்தது. இதனால், மும்பை வரும் வரை, வீரர்கள் தங்களை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது.

சவாலுக்கு ரெடி
இந்த சூழலில், மும்பைக்கு செல்வதற்கு முன்பு, வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஐஸ்ப்ரித் பும்ரா, தீபக் சாஹர் மற்றும் சித்தார்த் கவுல் ஆகிய வீரர்கள் இன்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய Pace அட்டாக்கை முன்னின்று பும்ரா வழிநடத்த உள்ளதால், பொறுப்பான சமத்துப் பிள்ளையாக வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

2வது டோஸ் எப்போ?
முன்னதாக நேற்று, இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சென்று இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்வார்கள் என்று தெரிகிறது. அப்படி அங்கு அனுமதி கிடைக்கவில்லை எனில், இந்தியாவிலேயே 2வது டோஸ் போடப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications