மும்பை: பாகிஸ்தான் அணியின் பவுலிங் அட்டாக்கை ஒப்பிடும் போது இந்திய அணியின் பவுலிங் அட்டாக்கின் வீச்சு குறைவாகவே இருப்பதாக பாகிஸ்தான் வீரர் அப்துல்லா சஃபிக் விமர்சித்துள்ளார்.
சர்வதேச அளவில் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்றால் கம்மின்ஸ், ரபாடா, ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, பும்ரா, ஷமி, சிராஜ், மார்க் வுட் என்று ஏராளமானோர் சம காலத்தில் விளையாடி வருகிறார். அதில் பும்ரா மட்டும் கடந்த 11 மாதங்களாக காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இதனால் டி20 உலகக்கோப்பை, ஐபிஎல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று ஏராளமான முக்கிய கிரிக்கெட் தொடர்களை மிஸ் செய்தார்.

மற்ற பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் மாறுபட்ட ஒன்றாக உள்ளது. ஏனைய பந்துவீச்சாளர்கள் 60 மீட்டர் தூரம் ஓடி வந்து அதிக வேகத்தில் வீசுவதை, பும்ரா வெறும் 12 அடிகள் மட்டுமே ஓடி வந்து 140 கிமீ வேகத்தில் பந்துகளை வீசுவார். அவரது பவுலிங் ஆக்ஷனும் அவருக்கு பெரும் சாதகனத்தை ஏற்படுத்தும். அந்த பவுலிங் ஆக்ஷன் மூலமாக ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங், பவுன்சர், யார்க்கர் என்று ஒரே ஓவரில் அத்தனை வெரைட்டிகளையும் வீச முடியும்.
இருப்பினும் அவரின் கம்பேக் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பும்ராவை வம்புக்கு இழுக்கும் வகையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அப்துல்லா சஃபிக் விமர்சனம் செய்துள்ளார். ஆசியக் கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் உள்ளிட்டோரின் பந்துவீச்சில் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே ஆசியக் கோப்பை தொடரில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வீரர் அப்துல்லா சஃபிக் பேசுகையில், ஒவ்வொரு முறை பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் போதும் நாங்கள் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் உள்ளிட்டோரை எதிர்கொண்டு வருகிறோம். அதனால் எதிரணி பவுலர்களை எங்களால் எளிதாக சமாளிக்க முடியும். அதிலும் இந்திய அணி பவுலிங்கை எளிதாக விளையாடிவோம். ஆசியக் கோப்பைத் தொடருக்கு பும்ராவும் வருவதாக சொல்கிறார்கள்.
சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணியின் பவுலிங் அட்டாக் தான் சிறந்தது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ளும் போதும், எங்களின் மன உறுதி அடுத்தக் கட்டத்திற்கு உயர்கிறது. பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக விளையாடினால், எந்த பந்துவீச்சாளகளையும் எங்களால் எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் அப்துல்லா சஃபிக் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணிக்கு எதிராக விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.