லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடங்கும் நிலையில், 10 ஆண்டு கால இந்திய ரசிகர்களின் கனவை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி நனவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இங்கிலாந்து மண்ணில் வைத்து ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதானதாக இருக்காது. ஏனென்றால் இந்திய அணியில் உள்ள அனுபவ வீரர்களின் காயம், அணிக்கு பின்னடைவை சந்தித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் இந்திய பந்துவீச்சுப் படையின் தலைவனாக இருக்க பும்ரா காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அதேபோல் எந்த மைதானமாக இருந்தாலும் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்கிய ரிஷப் பந்த் காயத்தால் விளையாட முடியாத சூழலில் இருக்கிறார்

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து ஆடுகளத்தில் கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுலும் அணியில் இல்லை. இதனால் வேறு வழியின்றி இந்திய அணி சில அனுபவமில்லாத புதிய வீரர்களுடன் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மறுபக்கம் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு எந்த காயமும் இல்லாமல் முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தில் வைத்தே ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக கைப்பற்ற காத்திருக்கிறது.
இந்திய அணி ஐசிசி தொடரை வென்று 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் ஆகியவற்றுக்கு பின் இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை. 2014 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி, 2014 டி20 உலகக்கோப்பை, 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் இறுதிப்போட்டி, 2019 உலகக்கோப்பை அரையிறுதி, 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அரையிறுதி என்று தொடர்ந்து ஐசிசி தொடர்களில் முக்கியப் போட்டிகளில் சொதப்பி வருகிறது.
இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்லாததால் ரசிகர்களின் ஏக்கம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் டெஸ்ட் பேட்டிங் ஃபார்ம், சுப்மன் கில்லின் அபார வளர்ச்சி, புஜாரா மற்றும் ரஹானேவின் மிரட்டலான கம்பேக் என்று இந்திய அணியின் பேட்டிங் கலவை அனுபவம் வாய்ந்ததாக உள்ளது. சுழலுக்கு அஸ்வின், ஜடேஜா, வேகத்திற்கு ஷமி, சிராஜ் என்று வேகப்பந்துவீச்சும் சிறப்பாக அமைந்துள்ளதால், திட்டத்தை சரியாக செயல்படுத்தினாலே இந்திய அணி வெற்றிபெறலாம் என்று பார்க்கப்படுகிறது.