புனே: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஹாட்ரிக் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி வங்கதேசம் அதிர்ச்சி கொடுத்தது. அதன்பின் நடைபெற்ற உலகக்கொப்பை தொடரில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்துவதற்காக வங்கதேச அணி வீரர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடர்ச்சியாக தடையாக இருந்து வருகிறார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. அதில் அதிகபட்சமாக இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ரோகித் சர்மா 126 பந்துகளில் 137 ரன்களை விளாசி அசத்தினார். தொடக்க வீரராக களமிறங்கி 47 ஓவர்கள் வரை ரோகித் சர்மா களத்தில் இருந்ததால் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்தது. இந்த போட்டியிலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த இரு உலகக்கோப்பை தொடரிலும் வங்கதேச அணிக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசி இருக்கிறார்.
இதனால் நடப்பாண்டுக்கான உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி கேப்டனாக களமிறங்கியுள்ள ரோகித் சர்மா, தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கதேச அணிக்கு எதிராக சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளிலும் விளையாடியுள்ள ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பின் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கிய ரோகித் சர்மா 131 ரன்களையும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 86 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா 3 போட்டிகளில் விளையாடி 217 ரன்களை விளாசி இருக்கிறார். ரோகித் சர்மா அபார ஃபார்மில் இருப்பதால், நாளைய ஆட்டத்தில் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.