மும்பை: கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வரிசையாக படுதோல்விகளை சந்தித்திருக்கும் நிலையில், அவரது தலைமையில் அடுத்து 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. என்ன நடந்தாலும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் ரோஹித் சர்மா தான் இந்திய அணியின் கேப்டன் என பிசிசிஐ முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது நல்லதா? அல்லது கெட்டதா? என இந்திய அணி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏனெனில், 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி சில உச்சங்களையும், பல படுதோல்விகளையும் சந்தித்து இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கும் முன்பே பல மோசமான தோல்விகளை இந்திய அணி சந்தித்தது. இலங்கை மண்ணில் நீண்ட காலத்திற்கு பின் ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. அதேபோல இந்திய மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக இழந்து, ஒயிட் வாஷ் தோல்வியையும் சந்தித்தது இந்திய அணி.
10 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து இருக்கிறது இந்திய அணி. இந்த படுதோலிகளுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தான் காரணம் எனும் நிலையில் அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், கேப்டனாக ரோஹித் சர்மாவே சாம்பியன்ஸ் ட்ராபியிலும் பங்கேற்பார் என பிசிசிஐ முடிவு எடுத்து உள்ளது. இது சரியான முடிவாக இருக்குமா? என்ற குழப்பம் ரசிகர்களுக்கு உள்ளது. ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை பேட்டிங்கில் ரோஹித் சர்மா சொதப்பினால் சாம்பியன்ஸ் ட்ராபி வாய்ப்பும் இந்திய அணிக்கு பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்க உள்ளது. அப்போது அவர் ஃபார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பதை கணித்து விடலாம்.