மோதல் வதந்தி
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே கருத்து வேறுபாடு இருக்கிறது, மோதல் உள்ளது என பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், பிசிசிஐ அது குறித்து என்ன முடிவு எடுக்கப் போகிறது என பலரும் ஆவலாக இருந்தனர்.
கேப்டன் மாற்றம்
கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.
மாறிய காட்சிகள்
சரி, இந்த மோதல் குறித்து குறைந்தபட்சம் ஒரு விசாரணையாவது நடைபெறும் என எதிர்பார்த்தால், அதுவும் நடக்கவில்லை. மாறாக, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு ஓய்வில் இருக்க வேண்டிய கோலி வலுக்கட்டாயமாக ஆடுகிறேன் என முன் வந்தார். அதனால், தற்காலிக கேப்டனாக அந்த தொடரில் பங்கேற்று இருக்க வேண்டிய ரோஹித் சர்மா, அந்த வாய்ப்பை இழந்தார்.
பிசிசிஐ விளக்கம்
இந்த நிலையில், கோலி - ரோஹித் சர்மா விவகாரம் குறித்து பிசிசிஐ விசாரணை நடத்துமா என நிர்வாக கமிட்டியிடம் கேட்ட போது, ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு எல்லாம் நாங்கள் எதிர்வினை ஆற்ற முடியாது. வீரர்கள் அவர்களாகவே வந்து சொல்லும் வரை அணியில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளனர்.
விசாரணையே இல்லையா?
அணியில் சிக்கல் என கூறும் போது அது உண்மையா என்ற அளவிற்காவது விசாரிக்காமல், வீரர்கள் சொன்னால் தான் விசாரிப்போம் என ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதத்தை முன் வைத்துள்ளது நிர்வாக கமிட்டி.
சிதறிக் கிடக்கும் பிசிசிஐ
பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கூறும் போது, ஊடகங்களில் தொடர்ந்து இந்திய அணி குறித்து சர்ச்சைக்குரிய முறையில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதை நிர்வாக கமிட்டி தடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அணி மேலாளரிடம் ஒரு அறிக்கையாவது கேட்கலாம் என கூறினர்.