இந்தூர் : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய பின் இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் பேசுகையில் முக்கியமான கேள்வி ஒன்றிற்கு அதெல்லாம் ரோஹித் சர்மா, டிராவிட்டின் தலைவலி என்று கூறி தப்பித்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தனர். கேப்டன் கே எல் ராகுல் 52 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது மழை பெய்ததால் 33 ஓவர்களில் 317 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு டிஎல்எஸ் முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து அடித்து ஆட ஆசைப்பட்டு விக்கெட்களை இழந்தது. இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன் பின் கேப்டன் கே எல் ராகுலை அழைத்து பேசினார் முரளி கார்த்திக். வெற்றி குறித்து கேட்ட அவர், அதன் பின் இந்திய அணியில் அனைத்து வீரர்களும் நன்றாக ஆடுவதால் யாரை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விக்கு தற்காலிக கேப்டன் ஆன கே எல் ராகுல் ஏதாவது பதில் சொல்லி மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் விதமாக ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் பெயரை கூறி அது அவர்களின் தலைவலி என்று கூறினார்.
கேப்டன் கே எல் ராகுல் பேச்சு - "நான் இந்த பிட்ச்சை பார்த்த போது இங்கே ஸ்பின் இவ்வளவு எடுபடும் என நினைக்கவில்லை. 400 ரன்கள் அடித்தது எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது. வீரர்களின் உலகக்கோப்பை தேர்வு பயிற்சியாளர் மற்றும் ரோஹித் சர்மாவின் தலைவலி. ரோஹித் வந்த உடன் அதைப் பார்த்துக் கொள்வார். யாரை அணியின் தேர்வு செய்தாலும் அவர்களுக்கு அணியில் ஒரு வேலை இருக்கும். அதிக ரன்களை அடித்த பின் வெளியே உட்காருவது கடினம் தான். ஆனால் எல்லோருமே அதைக் கடந்து தான் வந்திருக்கிறோம்." என்றார்.