சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் பேசியுள்ள வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாட உள்ளது. சென்னை அணி பிளே ஆஃப் செல்வதற்கு இந்தப் போட்டியில் வெற்றிபெறுவது மிக முக்கியமான ஒன்றாகும். அதேபோல் டெல்லி அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும். இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராகவே இந்த சீசன் பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்த பின், எதிரணி வீரர்கள் தோனியை சந்தித்து ஆட்டோகிராஃப் வாங்குவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது, அவருடன் சில நிமிடங்கள் உரையாடுவது உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் தோனி ரசிகர்களாகவே அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அந்த வகையில் எம்எஸ் தோனி குறித்து டெல்லி அணி வீரர்கள் பேசிய வீடியோ ஒன்றை அந்த அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பிக் பிரதர், மிஸ்டர் கூல், கேப்டன், லெஜண்ட், ஃபினிஷர், தலைவா, கடவுள் என்று சீனியர் வீரரான இஷாந்த் சர்மா முதல் இளம் வீரர்களான சேத்தன் சக்காரியா, மிட்செல் மார்ஷ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோ சமூக வலைதளங்களில் சென்னை அணி ரசிகர்கள் சார்பாக அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் டெல்லி அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு கேப்டன் தோனி அழைத்து செல்வார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.