மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான சியாட் விருதுகள் இன்று வழங்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற விழாவில் உலக கிரிக்கெட்டில் பல முக்கிய நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை வாங்கினர். கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கைப்பற்றினார். இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரோகித் சர்மா, இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.

தம்மை தேர்ந்தெடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதுபோன்ற விருதுகள் எனக்குள் இருக்கும் எல்லையை கடந்து செயல்பட ஊக்கம் அளிக்கின்றது என்று கூறியுள்ளார். இதைப் போன்று சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை விராட் கோலி கைப்பற்றினார்.
அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் போன்ற சாதனைகளை விராட் கோலி படைத்திருந்தார். இதே போன்று சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த பவுலருக்கான விருதை முகமது சமி கைப்பற்றினார். t20 உலக கோப்பையில் இந்திய அணி வெல்ல உதவிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதே போன்று சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனுக்கான விருதை ஜெய்ஸ்வால் கைப்பற்றினார். சிறந்த டெஸ்ட் பவுலருக்கான விருதை தமிழக வீரர் அஸ்வின் கைப்பற்றினார். சிறந்த டி20 பேட்ஸ்மேனுக்கான விருதை இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டும், சிறந்த டி20 பவுலருக்கான விருதை நியூசிலாந்து வீரர் டிம் சவுதியும் கைப்பற்றினர்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய சிறந்த வீரருக்கான விருதை தமிழக சாய் கிஷோர் கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் சிறந்த தலைமை பண்பை வெளி காட்டியதற்காக ஸ்ரேயாஸ் ஐயருக்கு விருது வழங்கப்பட்டது. இதே போன்று விளையாட்டுத் துறையில் சிறந்த நிர்வாகத்தை வெளிப்படுத்தியதற்காக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கும் விருது வழங்கப்பட்டது. சிறந்த இந்திய வீராங்கனை பேட்டர் பிரிவில் ஸ்மிருதி மந்தானாவுக்கும் பவுலர் பிரிவில் தீப்தி சர்மாவுக்கும் விருது வழங்கப்பட்டது.