
வெற்றி பெற தீவிரம்
துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்காக, இரு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றன. வெற்றிப் பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றிப் பெறும் அணியோடு மீண்டும் மோதும். ஸோ, எப்படிப்பார்த்தாலும், இன்றைய போட்டியில் தோற்கும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது. எனினும், இன்றே வெற்றியை பதிவு செய்து, இறுதிப் போட்டிக்கு சென்றுவிட வேண்டும் என்று டெல்லி மிகத் தீவிரமாக உள்ளது.

ரன்கள் நிச்சயம் வராது
டெல்லியும் சென்னை அணிக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் குறிப்பானது, ஓப்பனர்களை விரைவாக அவுட் செய்வது.ஆம்! ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் ஆகியோரை, பவர் பிளேக்குள் வீழ்த்தி விட வேண்டும் என்பதே டெல்லியின் பிரதான வியூகமாகும். இருவரையும் 6 ஓவர்களுக்குள் அவுட் செய்துவிட்டாலே, சென்னை அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதை டெல்லி நன்கு உணர்ந்து வைத்துள்ளது. இறுதிக் கட்டத்தில் பவுலர்களை விளாசும் அளவுக்கு ஹிட்டர்கள் இல்லை என்பதும் டெல்லி பிளஸ் பாயிண்ட் தான். ஜடேஜா அடித்தால் தான் உண்டு. அவர் அடிக்கவில்லை எனில், கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்கள் நிச்சயம் வராது.

மன அழுத்தத்தில் பண்ட்
டெல்லிக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த இடத்துக்கு அத்தனை எளிதாக வந்துவிடவில்லை என்று சாஹல் பாராட்டித் தள்ளியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உண்மையில், எல்லோரும் ரிஷப் பண்ட், மஹி பாய் போல இருக்க வேண்டும் என்று விரும்பினர். ஸ்டம்ப்களின் பின்னால் MSD இருந்த விதத்தை போல் ரிஷப்பும் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். பண்ட் எப்போதாவது ஏதேனும் கேட்சை விட்டாலோ அல்லது டிஆர்எஸ் தவறாக அமைந்தாலோ, மைதானம் முழுவதும் 'மஹி மஹி' என்று கத்தத் தொடங்குவார்கள். அதனால், பண்ட் மீது அதிக அழுத்தம் இருந்தது, ஏனென்றால் அந்த நேரத்தில் அவருக்கு வயது 19 அல்லது 20 தான். இவை அனைத்தையும் புறக்கணித்து உங்கள் விளையாட்டில் கவனம் செலுத்துமாறு நாங்கள் அவரிடம் கூறுவோம். அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்தார், பின்னர் அவரும் அணியில் இருந்து சிறிது நேரம் வெளியே இருந்தார்.

மரியாதை கொடுக்கணும்
அதன் பிறகு, அவர் ஒரு அற்புதமான கம்பேக் கொடுத்தார். அவர் நிறைய முன்னேறியுள்ளார்; அவர் நிறைய முதிர்ச்சியைக் காட்டியுள்ளார். அவரது செயல்திறன் மிகவும் நன்றாக இருந்தது, ஒரு விளையாட்டு வீரராக, மைதானத்தில் இருக்கும்போது, அவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறார். யாரும் மோசமாக செயல்பட விரும்பவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் அந்த வீரருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று சாஹல் கூறினார்.

சிஷ்யரை சமாளிப்பாரா தோனி?
இன்று அதே மஹி பாயை எதிர்த்து ரிஷப் பண்ட் விளையாடுகிறார். லீக் சுற்றில், இரண்டு போட்டிகளிலும் சென்னை டெல்லியிடம் சரண்டர் ஆகியிருக்கிறது. போதாத குறைக்கு, இவ்வளவு நாளாக காயம் காரணமாக வெளியே உட்கார்ந்து கொடி ஆட்டிக் கொண்டிருந்த ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், சென்னைக்கு எதிராக இன்று களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சென்னை அணிக்கு கூடுதல் தலைவலி இணைந்துள்ளது. சிஷ்யரை சமாளிப்பாரா தோனி?


Click it and Unblock the Notifications











